பல்லாயிரம் பாக்கி.. வாகன ஓட்டிகளின் வீட்டுக்கே போய் வசூலிக்க பெங்களூர் போலீஸ் முடிவு
பெங்களூர்: ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பாக்கி வைத்திருக்கும் வாகன ஓட்டிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று, அவர்களிடம் அபராதம் வசூல் செய்யப்படும் என பெங்களூர் போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனர் அனுசேத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது தெரிவித்துள்ளார்
இந்தியாவில் சென்னை, கொச்சி, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி, புனே உள்பட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோருக்கு ஆன்லைன் முறையிலேயே அபராதம் விதிக்கப்படுகிறது. சிக்னலை மதிக்காமல் செல்வோர், சீட் பெல்ட் அணியாமல் செல்வோர், ஒரு வழிப்பாதையில் செல்வோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

இதேபோல் இரு சக்கர வாகனத்தை பொறத்தவரை ஒரே வாகனத்தில் 3 பேர் செல்வது, தலை கவசம் அணியாமல் செல்வது, இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனத்தை இயக்குவது, அதிவேகமாக வாகனத்தை இயக்குவது உள்பட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
அப்படி விதிக்கப்படும் அபராதங்கள் எல்லாம் குறிப்பிட்ட வாகனத்தில் ஆர்சிபுக்கின் பெயரில் தான் இருக்கும். சில வாகன ஓட்டிகளுக்கு 20 ஆயிரம், 40 ஆயிரம், 50 என லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் இருக்கும். சில இருசக்கர வாகனங்களுக்கு 10000 என்கிற அளவிற்கு கூட அபராதம் நிலுவையில் இருக்கும். எனவே வாகனங்களை வாங்கும் முன்பு, ஆர்சி புக்கை வைத்து ஆன்லைனில் சோதித்தால் எவ்வளவு அபராதம் கட்ட வேண்டும் என்று தெரிந்துவிடும். அது தெரியாமல் வாங்கினால் சிக்கல் தான்.. சரி விஷயத்திற்கு வருவோம்.. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பாக்கி வைத்திருக்கும் வாகன ஓட்டிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று அபராதம் வசூல் செய்யப்படும் என பெங்களூர் போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனர் அனுசேத் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனர் அனுசேத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது அவர் கூறுகையில், "பெங்களூர் நகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சில வாகன ஓட்டிகள் தொடர்ந்து விதிமுறைகளை மீறி வருகிறார்கள், இதன் காரணமாக அவர்களுக்கு அதிக அளவு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அதிர்ல ஆயிரக்கணக்கான ரூபாய் அபராதம் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளார்கள்.
இதுபோன்று அதிக முறை விதிமுறைகளை மீறியவர்கள் மற்றும் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் அபராதம் செலுத்தாமல் இருக்கும் வாகன ஓட்டிகளின் வீடுகளுக்கே போக்குவரத்து போலீசார் நேரில் சென்று அபராத தொகையை வசூல் செய்ய இருக்கிறார்கள். அதிக அளவு அபராதம் செலுத்தாமல் பாக்கி வைத்திருக்கும் வாகன ஓட்டிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி, 2 ஆயிரத்து 681 வாகன ஓட்டிகள் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் அபராதம் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளார்கள்.
சில வாகன ஓட்டிகள் அபராத தொகையை செலுத்தாமல், தங்களது வாகனத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார்கள். எனவே அப்படி தெரியாமல் அந்த வாகனங்களை வாங்கியவர்கள், அபராதம் செலுத்துவதற்கு கூடுதல் காலஅவகாசம் வழங்குவோம். 6 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டியது இல்லை. அதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் 3 அல்லது 4 குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லக்கூடாது. அது பாதுகாப்பான பயணம் கிடையாது" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications