கர்நாடகாவிலுள்ள பள்ளியில் மாணவர்கள் நமாஸ் செய்ததாக புகார்.. வெளியான வீடியோ.. கல்வித்துறை விசாரணை
பெங்களூர்: ஹிஜாப் சர்ச்சைக்கு மத்தியில் கர்நாடக பள்ளியில் மாணவர்கள் நமாஸ் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுபற்றி விசாரித்து அறிக்கை அளிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பியூ கல்லூரியில் தான் முதன் முதலில் ஹிஜாப் தொடர்பான பிரச்னை ஏற்பட்டது. ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் காவி ஷால் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹிஜாப்புக்கு ஆதரவாகவும் ஒருதரப்பு போராட்டத்தை துவங்கியது. இருதரப்பு போராட்டம் பற்றிய விவரம் காட்டுத்தீயாய் பரவவே பிற மாவட்ட கல்லூரிகளிலும் போராட்டம் துவங்கியது. இதையடுத்து சில கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட நிலையில் பிரச்னை சர்ச்சையானது.

ஐகோர்ட்டு விசாரணை
ஹிஜாப் தடையை எதிர்த்து உடுப்பி மாவட்ட மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு ஒரு நீதிபதி அமர்வில் இருந்து 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது. கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி ரிது ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ஜெஎம் காஸி ஆகியோர் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்தது. மாநிலத்தில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டும். வழக்கு நிலுவையில் உள்ளதால் மதம்சார்ந்த ஆடைகள் அணிந்து மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு வரக்கூடாது என இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர். மேலும் வழக்கு விசாரணையை பிப்.,14க்கு ஒத்திவைத்தனர்

பள்ளி, கல்லூரிகள் திறப்பது எப்போது
இதற்கிடையே, பிப்.,8 முதல் பள்ளி, கல்லூரிகளை முன்னெச்சரிக்கையாக கர்நாடக அரசு மூடியது. ஐகோர்ட்டு உத்தரவிட்டும் பதற்றம் நிலவியதால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் பிப்.,14ல் முதற்கட்டமாக 8, 9, 10 வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பியூ உள்பட டிகிரி கல்லூரிகள் திறப்பது குறித்து ஐகோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வரும் பிப்.,14ல் முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்த உள்ளார். அதன்பிறகு இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

நமாஸ் வீடியோ வைரல்
இந்நிலையில் கர்நாடகத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்கள் நமாஸ் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. ஏற்கனவே மாநிலத்தில் ஹிஜாப் தடை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த நிலையில், பள்ளியில் மாணவர்களின் நமாஸ் வீடியோ வேகமாக சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வைரலானது. கல்வித்துறை, போலீசாரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

கல்வித்துறை விசாரணை
இதனால் விசாரணை நடத்த கர்நாடக கல்வித்துறை உத்தரவிட்டது. விசாரணையில் இந்த வீடியோ தட்சிண கன்னடா மாவட்டம் கடப்பா தாலுகா அங்காதடுக்கா கிராமத்தில் உள்ள அரசு துவக்க பள்ளியில் பிப்.,4ல் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று அங்கு சென்ற கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். அப்போது வீடியோ வெளியான பிறகு மாணவர்களை அழைத்து பேசினோம். பள்ளியில் மதம் சார்ந்த விஷயங்களை மேற்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தினோம் என்றனர். மேலும் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்படி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக வட்டார கல்வி அதிகாரி லோகேஷ் கூறினார்.












Click it and Unblock the Notifications