லீக் ஆன வீடியோ.. கையும் களவுமாக "சிக்கிய" பாஜக புள்ளியின் மகன்.. திருதிருவென விழிக்கும் கர்நாடக தாமரை
லஞ்ச வழக்கில் கர்நாடக எம்எல்ஏவின் மகன் சிக்கிய விவகாரத்தில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாஜக எம்எல்ஏ ஒருவரின் மகன் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் எப்படி சிக்கினார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகா அரசின் மைசூர் சாண்டல் சோப் மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்தவர் பிரசாந்த். இவர் தாவணக் கெரே மாவட்டம் சென்னைக்கிரி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் மாதல் விருபக்ஷப்பாவின் மகனாவார். இந்நிலையில் மைசூர் சாண்டல் சோப் நிறுவனத்திற்கு மூல பொருட்கள் கொள்முதல் செய்ய வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. இதனை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை பெற பல நிறுவனங்கள் இருந்தாலும், கெமிக்சில் கார்ப்பரேஷன் மற்றும் டெலிசியா கார்ப்பரேஷன் ஆகிய இரண்டு நிறுவனங்களிடம் பிரசாந்த் ரகசியமாக பேரம் பேசியுள்ளார். அதாவது ஒப்பந்தம் இந்த நிறுவனங்களுக்கே வழங்கப்படும் எனவும் ஆனால் அதற்காக ரூ.81 லட்சத்தை லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்றும் பிரசாந்த் கோரியிருக்கிறார்.

பேரம்
இதில் முதல்கட்டமாக ரூ.40 லட்சம் மார்ச் 2ம் தேதி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டடுள்ளது. இதனையடுத்து நிறுவனம் சார்பில் பணம் வழங்கப்பட்டுள்ளது. அப்போது உடனடியாக அங்கு வந்த லோக் ஆயுக்தா அதிகாரிகள் பிரசாந்தை கையும் களவுமாக பிடித்துள்ளனர். இதனை எதிர்பாராத பிரசாந்த் முக்கிய ஆவணங்களை மென்று விழுங்க முயன்றிருக்கிறார். ஆனால் அதிகாரிகள் இதனை தடுத்துள்ளனர். பின்னர் அவருடைய வீட்டில் சோதனை நடத்தியதில் சுமார் ரூ.6 கோடியை கைப்பற்றியுள்ளனர். அதேபோல அலுவலகத்திலிருந்து ரூ.1.2 கோடி என மொத்தமாக ரூ.7.2 கோடியை கைப்பற்றியுள்ளனர்.

வாய்ஸ் ரெக்கார்ட்
இது கர்நாடக மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் கர்நாடகாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த சமபவங்கள் பேசுபொருளாகியுள்ளன. இந்நிலையில் இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது கெமிக்சில் கார்ப்பரேஷன் & டெலிசியா கார்ப்பரேஷன் நிறுவனங்களின் உரிமையாளர்களாகன தொழிலதிபர் ஷ்ரேயாஸ் காஷ்யப் மற்றும் எஸ் மூர்த்தியும் கடந்த மாதம் இந்த ஒப்பந்த புள்ளி ஒதுக்கீடு குறித்து பிரசாந்திடம் பேசியுள்ளார். அப்போது காஷ்யப் Tecno View ஸ்மார்ட்-வாட்சை கையில் கட்டி இருந்துள்ளார். இந்த வாட்சில் அவர்கள் பேசியது அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீடியோ ரெக்கார்ட்
அதேபோல கடந்த 2ம் தேதி லஞ்சம் கொடுப்பதற்காக பிரசாந்த் அலுவலகத்திற்கு சென்ற போதும் காஷ்யப் இதே வாட்சை கட்டிக் கொண்டு சென்றிருக்கிறார். பொதுவாக இப்படி டீல் பேச வருபவர்களுக்கு கறாரான செக்கப்-அப்கள் இருக்கும். உள்ளே மொபைல் உள்ளிட்ட இந்த எலக்ட்ரானிக் பொருட்களையும் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. ஆனால் காய்ஷப் ஸ்பெஷல் கெஸ்ட். ஏனெனில் பிரசாந்தின் நண்பர்கள் நடத்தும் சில நிறுவனங்களுக்கும் இவர்தான் மூலப்பொருட்களை விநியோகித்து வருகிறார் எனவே இவருக்கு கறாரான செக்கிங் கிடையாது. இப்படியாக காய்ஷப் ஸ்மார்ட் வாட்சுடன் உள்ளே சென்றிருக்கிறார்.

கைது
உள்ளே இவர்கள் பேசிய அனைத்தும் இந்த வாட்சில் உள்ள ரகசிய கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ ஆதாரத்தை அடிப்படையாக கொண்டுதான் பிரசாந்தை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும் இவரது தந்தையான எம்எலஏ விருபக்ஷாப்பாவை காவல்துறையினர் இதுவரை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications