திருமணம் ஆகலையா? ‛அப்போ’ புரியாது! சித்தராமையா கூறிய ஒரு வார்த்தை! குபீரென சிரித்த டிகே சிவக்குமார்
பெங்களூர்: உலக புகழ்பெற்ற மைசூர் தசரா விழா அக்டோபர் 15ம் தேதி தொடங்கி 10 நாள் நடைபெறுகிறது. இதுதொடர்பாக ஆலோசித்த முதல்வர் சித்தராமையா பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது கேள்வி கேட்ட நிருபரிடம், ‛‛திருமணம் இன்னும் ஆகவில்லையா?'' என பதில் கேள்வி எழுப்பிய சித்தராமையா, வேடிக்கையாக சொன்ன வார்த்தை துணை முதல்வர் டிகே சிவக்குமார் உள்பட அனைவரையும் சிரிக்க வைத்தது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் கடந்த மே மாதம் நடந்து முடிந்தது. இதில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பொறுப்பேற்று செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் ஆண்டுதோறும் மைசூரில் நடக்கும் 10 நாள் உலக புகழ் பெற்ற தசரா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தசரா விழா அக்டோபர் மாதம் 15ம் தேதி முதல் தொடங்கும் தசரா விழா அக்டோபர் 24ம் தேதி முடிவடைய உள்ளது.
நிறைவு நாளான அக்டோபர் 24ம் தேதி விஜயதசமி தினத்தில் தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் 750 கிலோ எடைகொண்ட தங்க அம்பாரியில் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்க அதனை யானை சுமந்து கம்பீரமாக நடந்து செல்லும். அதனை தொடர்ந்து பிற யானைகள் வரிசையாக அணிவகுத்து செல்லும். இந்த விழாவை காண இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் வருவார்கள்.
இந்நிலையில் தான் மைசூர் தசரா விழா கொண்டாட்டம் பற்றி முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூர் விதானசவுதாவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மைசூரு தசரா விழாவை எவ்வாறு கொண்டாடுவது?, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது கொரோனா, பயிர் சேதம் உள்ளிட்டவற்றால் கடந்த 3 ஆண்டுகளாக தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்படாத நிலையில் இந்த முறை வெகுவிமரிசையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து முதல்வர் சித்தராமையா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‛‛மைசூர் தரசா விழாவை பாரம்பரிய முறையில் கோலாகலமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் 5 உத்தரவாத திட்டங்களை மக்களுக்கு எடுத்து கூறும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடக்கும். கலாசார நிகழ்ச்சிகள், திரைப்பட விழா நடத்தப்படும். அதோடு வழக்கம்போல் இளைஞர் தசரா, விவசாய தசரா நிகழ்வுகளும் இடம்பெற உள்ளது. தசரா விழாவை தொடங்கி வைப்பது யார் என்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் விழாவை தொடங்கி வைப்போரின் பெயர் அறிவிக்கப்படும்'' என கூறினார்.
இதையடுத்து பத்திரிகையாளர்கள் சித்தராமையாவிடம் கேள்விகள் கேட்டனர். அப்போது இளம் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛தசரா விழாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுமா?'' என கேள்வி எழுப்பினார். அதற்கு சித்தராமையா சிரித்தபடியே, ‛‛தசரா விழா என்றால் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம் தானே'' என கூறினார்.

அப்போது அருகில் இருந்த துணை முதல்வர் டிகே சிவக்குமார், ‛‛நீங்களும் உங்களின் குடும்பத்தினரை அழைத்து வரலாம்'' என்றார். அதற்கு, ‛‛நாங்கள் பஸ்களில் டிக்கெட் எடுக்க வேண்டுமே'' என நிருபர் கூறினார். இந்த வேளையில், சித்தராமையா, ‛‛இன்னும் உங்களுக்கு திருமணம் ஆகவில்லையா?'' என கேட்டார். அதற்கு நிருபர், ‛‛ ஆகவில்லை'' எனக்கூறவே அடுத்த நொடி சித்தராமையா, ‛‛அப்போது உங்களுக்கு எதுவும் புரியாது'' என வேடிக்கையாக கூறினார். இதை கேட்ட டிகே சிவக்குமார் உள்பட அனைவரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.
அதாவது கர்நாடகாவில் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அமல்படுத்தி உள்ளது. திருமணம் செய்திருந்தால் மனைவி இலவசமாக பயணிக்க தசரா விழாவுக்கு அரசு பஸ்சில் இருவரும் சென்று வரலாம் என்பதை கூறும் வகையில் சித்தராமையா இப்படி நிருபரிடம் வேடிக்கையாக கேள்வி கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications