எடியூரப்பா மகனை வெல்வாரா? பாஜக கோட்டையில் காங் வேட்பாளரான நடிகர் சிவராஜ் குமாரின் மனைவி! களநிலவரம்
பெங்களூர்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் சிவமொக்கா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மருமகளும், நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியுமான கீதா சிவராஜ்குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் அங்கு பாஜக எம்பியாக உள்ள எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவை வீழ்த்துவாரா? என்பது பற்றி பார்க்கலாம்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ராகுல் காந்தி மீண்டும் கேரளா வயநாட்டில் போட்டியிட உள்ளார். மொத்தம் 39 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் இன்று வெளியானது. இதில் கர்நாடகாவில் 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் மறைந்த கன்னட நடிகரான ராஜ்குமாரின் மருமகள் கீதா சிவராஜ்குமாருக்கு காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளது. சிவமொக்கா தொகுதியில் கீதா சிவராஜ் குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகனும் நடிகருமான சிவராஜ்குமாரின் மனைவி ஆவார்.
மேலும் கீதா சிவராஜ் குமார் முன்னாள் கர்நாடகா முதல்வர் பங்காரப்பாவின் மகள் ஆவார். கீதாவின் தம்பி மது பங்காரப்பா தற்போதைய கர்நாடகா அரசின் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருக்கிறார். அரசியல் பின்புலம் கொண்ட கீதா சிவராஜ் குமார், தம்பி மது பங்காரப்பாவுடன் முதலில் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சியில் செயல்பட்டு வந்தார். அதன்பிறகு அவர்கள் 2 பேரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
தற்போது கீதா சிவராஜ் குமார் பெங்களூரில் கணவர் சிவராஜ் குமாருடன் வசித்து வருகிறார். அப்புறம் ஏன் பெங்களூரை தவிர்த்து இவருக்கு சிவமொக்காவில் காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியது என நீங்கள் கேட்கலாம். அதற்கு முக்கிய காரணம் உள்ளது. அதாவது கீதா சிவராஜ் குமாரின் சொந்த மாவட்டம் சிவமொக்கா தான். இங்குள்ள சொரபா தொகுதியில் எம்எல்ஏவாகி முதல்வர் பதவியை அலங்கரித்தவர் கீதாவின் தந்தை பங்காரப்பா. மேலும் இப்போது சொரபா தொகுதி எம்எல்ஏவாக தம்பி மதுபங்காரப்பா உள்ளார். இதுதான் சிவமொக்காவில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக கீதா களமிறக்கப்பட்டு உள்ளதற்கான காரணமாகும்.
மேலும் சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதி என்பது பாஜகவின் கோட்டையாக உள்ளது. கடந்த 2005 தேர்தலில் கீதாவின் தந்தை பங்காரப்பா இந்த தொகுதியில் வெற்றி பெற்றார். அதன்பிறகு 2009, 2014, 2018 (இடைத்தேர்தல்), 2019 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து பாஜக தான் வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணம் கர்நாடகாவில் பாஜகவின் முகமாக அறியப்படும் பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தான்.
எடியூரப்பா மண்டியாவில் பிறந்திருந்தாலும் அவரது வாழ்க்கை என்பது சிவமொக்காவில் தான் உள்ளது. கடந்த 2014ல் எடியூரப்பா இந்த தொகுதியில் வென்று எம்பியானார். முன்னதாக எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா 2009 எம்பியாக இருந்தார். அதன்பிறகு மீண்டும் 2018, 2019 ஆகிய தேர்தல்களில் எடியூரப்பா மகன் ராகவேந்திரா வென்று தற்போது சிட்டிங் எம்பியாக உள்ளார்.
இந்த தொகுதியை பொறுத்தமட்டில் எடியூரப்பாவின் செல்வாக்கை மீறி வெற்றி பெறுவது என்பது கடினமான காரியமாகும். ஏனென்றால் இந்த தொகுதியில் தொடர்ந்து கீதா சிவராஜ் குமாரின் குடும்பத்தினர் போட்டியிட்டு தோல்வியடைந்து வருகின்றனர். கடந்த 2009ல் கீதாவின் தந்தை பங்காரப்பாவை எடியூரப்பாவின் மகன் வீழ்த்தினார். 2014ல் ஜேடிஎஸ் சார்பில் போட்டியிட்ட கீதா சிவராஜ் குமாரை பாஜகவில் போட்டியிட்ட எடியூரப்பா வீழ்த்தினார். இந்த தேர்தலில் கீதா சிவராஜ் குமார் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
அதன்பிறகு கடந்த 2018இடைத்தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தல்களில் கீதா சிவராஜ் குமாரின் தம்பி மது பங்காரப்பா ஜேடிஎஸ் சார்பில் போட்டியிட்டு பாஜகவில் களமிறங்கிய எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவிடம் தோற்றார். இந்நிலையில் தான் தற்போது மது பங்காரப்பாவின் அக்காள் கீதா சிவராஜ் குமார் சிவமொக்கா தொகுதியில் களமிறங்கி உள்ளார். இந்த தொகுதியில் மீண்டும் எடியூரப்பாவின் மகனும் சிட்டிங் எம்பியுமான ராகவேந்திரா தான் போட்டியிடுவார் என கூறப்படும் நிலையில் அவரை கீதா சிவராஜ் குமார் வீழ்த்துவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications