சூரியனை நெருங்கும் ஆதித்யா எல்1.. புவி சுற்றுவட்டப் பாதை 4வது முறையாக உயர்த்தி இஸ்ரோ வெற்றி
பெங்களூர்: நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 திட்டமிட்டபடி மெதுவாக தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்த நிலையில், சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 எனும் விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. தற்போது இதன் புவி சுற்றுவட்டப் பாதையை இஸ்ரோ 4வது முறையாக வெற்றிகரமாக உயர்த்தியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்த வெற்றியை தொடர்ந்து பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் சேர்ந்து விண்வெளி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன. இந்நிலையில் இந்தியாவுக்கு மற்றொரு மைல் கல்லாக அமைந்துள்ளது ஆதித்யா எல்1 எனும் திட்டம். அதாவது இந்த திட்டத்தின் மூலம் ஏவப்படும் விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும். காந்த புயல்களை முன்கூட்டியே கணிக்கவும், சூரியனின் பல்வேறு அடுக்குகளை ஆய்வு செய்யவும் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளும்.
இந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் கருவிகளுடன் ஆதித்யா எல்1 விண்கலம் PSLV-C57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்த கடந்த 2ம் தேதி காலை 11.50 மணியளவில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. சூரியனை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பும் முதல் விண்கலம் இது என்பதால் உலக நாடுகளே இந்த மிஷன் மீது மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டிருந்தனர். ஆதித்யா எல்1 விண்வெளியில் ஏவப்பட்ட நிலையில், அது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள எல்1 எனும் புள்ளியில் நிலைநிறுத்தப்படும்.
இந்த புள்ளிக்கு விண்கலம் சென்றடைய 125 வரை ஆகும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த விண்கலம் கவண் கல் எறிதல் தொழில்நுட்பம் மூலம் எல் 1 புள்ளியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆதித்யா எல்1 புவி சுற்றுவட்டப் பாதையை 4வது முறையாக வெற்றிகரமாக உயர்த்தியுள்ளது இஸ்ரோ. இதன் மூலம் ஆதித்யா எல்1 குறைந்தபட்சமாக பூமிக்கு 256 கி.மீ தொலைவிலும், அதிகபட்சமாக 1,21,973 கி.மீ தொலைவிலும் சுற்றி வருகிறது. இது வரும் 19ம் தேதியன்று புவியின் ஈர்ப்பு விசையிலிருந்து லாக்ராஞ்சியன் புள்ளியை நோக்கி பயணிக்கும்.
ஏற்கெனவே கடந்த 3வது முறையாக இப்படி புவி சுற்றுவட்டப் பாதையை அதிகரித்த போது ஆதித்யா எல்1 விண்கலம் பூமிக்கு அதிகபட்சமாக 71,767 கி.மீ தொலைவில் பூமியை சுற்றி வந்தது. இந்நிலையில் தற்போது இந்த உயரம் 1,21,973 கி.மீ அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்பாட்டின் போது மொரிஷியஸ், பெங்களூரு, SDSC-SHAR மற்றும் போர்ட் பிளேர் ஆகிய இடங்களில் உள்ள இஸ்ரோவின் தரை நிலையங்கள் விண்கலத்தை கண்காணித்தன என்று இஸ்ரோ கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications