பெங்களூர் ஐடி ஊழியர்கள் இன்னைக்கு ஆபிஸ் போக வேண்டாம்.. போலீஸ் முக்கிய அறிவிப்பு
பெங்களூர்: நாட்டிலேயே போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதியாக பெங்களூரு இருக்கிறது. இந்நிலையில் சுதந்திர தினம், வீக் எண்ட் உள்ளிட்ட காரணங்களால் பெங்களூர் போக்குவரத்து காவல்துறை ஐடி ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான அட்வைஸை வழங்கியிருக்கிறது.
கர்நாடக மாநிலம், பெங்களூரில் போக்குவரத்து நெருக்கடி பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாட்டிலேயே போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் பகுதிகளில் பெங்களூர் முதல் இடத்திலும், உலகளவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் நகரங்களில் பெங்களூர் 6வது இடத்திலும் இருக்கிறது. இதனால் பெங்களூர் வாசிகள் வாகனங்களை எடுப்பதற்கே அச்சப்படுகின்றனர். சமீபத்தில் பெய்த கனமழையால் பெங்களூர் வெள்ளக்காடாக மாறி போக்குவரத்து மேலும் ஸ்தம்பித்தது.

இந்நிலையில், சுதந்திர தினம், வீக் எண்ட், ரக்ஷா பந்தன் ஆகிய நிகழ்வுகள் வருவதால் பெங்களூர் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை ஓரளவுக்கு சமாளிக்க காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை. வெள்ளிக்கிழமை ( ஆகஸ்ட் 16) வரலட்சுமி விரதம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வீக் எண்ட். திங்கள்கிழமை (ஆகஸ்ட் 19) ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட உள்ளது. இந்த லாங் வீக் எண்ட் குறித்து பெங்களூர் சிட்டி போக்குவரத்து இணை ஆணையர் அனுசீத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வீக் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக 14.8.2024 (இன்று) பெங்களூர் நகரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
எனவே, ஐடி ஊழியர்கள் இன்று 14ஆம் தேதி ஓர்க் ப்ரம் ஹோம் முறையில் பணியாற்றும்படி கேட்டுக் கொள்கிறோம். இன்றைய தினம் தங்களது ஊழியர்களை ஒர்க் ப்ரம் ஹோமில் பணியாற்ற நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும். முக்கியமாக ஐடி நிறுவனங்கள் அதிகமுள்ள ஒ.ஆர்.ஆர். (Outer Ring Road) சாலையில் உள்ள நிறுவனங்கள் இதை கடைப்பிடிக்க வேண்டும். இதன்மூலம் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், லாங் வீக் எண்டில் வெளியூர் செல்ல விரும்புவோர் எந்த சிரமும் இல்லாமல் பயணிக்கலாம். இதில் உங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். பெங்களூரு போக்குவரத்து நெரிசலை புரிந்துகொண்டு, நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கைக்கொடுக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.
மக்கள் மீது நம்ம பெங்களூர் மீது காவல்துறைக்கு இவ்வளவு அக்கறையா என்று பலரும் ஆச்சரியப்படலாம். ஆனால், இதேபோல கடந்தாண்டு செப்டம்பர் 27ஆம் தேதி பெங்களூரில் லாக் வீக் எண்ட் வந்தபோது போக்குவரத்து நெரிசலால் சிட்டி முழுவதும் ஸ்தம்பித்தது. சர்ஜாபூர் ரோடு, மரதஹல்லி, கேஆர் புரம் உள்ளிட்ட பல முக்கிய சாலைகளில் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நொந்து போனார்கள். அப்போது காவல்துறை உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கவில்லை என்று கடுமையான விமர்சிக்கப்பட்டது. இதன் காரணமாகதான் காவல்துறை இந்தமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சாதாரண நாட்களிலேயே பெங்களூர் போக்குவரத்து நெருக்கடி பற்றி சொல்ல தேவையில்லை. இதுபோன்ற பண்டிகை காலத்தில் பெங்களூர் போக்குவரத்து நெருக்கடி வழக்கத்தை விட இரண்டு மடங்கும் அதிகம் இருக்கும். பெங்களூருவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், கர்நாடாக அரசு போக்குவரத்து கழகத்தில் வெளியூர் செல்ல முன்பதிவு செய்துள்ள விவரங்களையும் சேகரித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications