"ராஜினாமா செய்யுங்க.. இல்லைனா சம்பளம் கிடையாது".. பெங்களூரில் ஐடி ஊழியர்களை மிரட்டும் நிறுவனங்கள்
பெங்களூர்: டிசிஎஸ், அக்சென்சர், மைக்ரோசாஃப்ட் உள்பட பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் பெங்களூரில் உள்ள பல்வேறு ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சம்பளம் வழங்கப்படாது என்று மிரட்டி வருவதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் ‛சிலிக்கான் சிட்டி' என்று பெங்களூர் அழைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பிற நகரங்களை ஒப்பிடும்போது பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் பெங்களூரில் செயல்பட்டு வருவது தான். எச்சிஎல், அக்சென்சர், விப்ரோ, கூகுள், டிசிஎஸ் உள்பட பல ஐடி நிறுவனங்கள் பெங்களூரை மையப்படுத்தி செயல்பட்டு வருகின்றன.

தற்போது ஐடி நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏஐ பயன்பாடு, நிர்வாக மறுசீரமைப்பு, பொருளாதார சீரமைப்பு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.
இந்நிலையில் தான் பெங்களூரில் உள்ள பல ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் மிரட்டப்படுவதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பணியை தானாகவே ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சம்பளம் வழங்கப்படாது என்று பல ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர். எப்போது பணியை இழக்க போகிறோமோ என்ற அச்சத்தில் வேலை செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக கர்நாடகா மாநில IT/ITes ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சுகாஷ் அடிகா கூறுகையி்ல, ‛‛இப்போது தினமும் எனக்கு ஐடி ஊழியர்களிடம் இருந்து புகார்கள் வருகிறது. பணியை ராஜினாமா செய்ய வேண்டும் இல்லாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவீர்கள் என்று நிறுவனங்கள் ஊழியர்களை மிரட்டுவதாக புகார்கள் வருகிறது. பொதுவாக, நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்குப் பதிலாக கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கவே விரும்புகின்றன.
ஏனென்றால் பணி நீக்கம் சட்டத்துக்கு புறம்பானது. இதனால் ஊழியர்கள் நீதிமன்றத்தை அணுகலாம். இதனால் நிறுவனங்கள் பணியை ராஜினாமா செய்யும்படி ஊழியர்களை கட்டாயப்படுத்தி வருகிறது. இது துரதிர்ஷ்டவசமானது. இதனால் கட்டாய ராஜினாமாவுக்கு வலியுறுத்தும் நிறுவனங்கள் மீது வழக்கு தொடர வலுவான சட்டம் தேவையாக உள்ளது'' என்றார்.
அதேபோல், IT/ITes ஜனநாயக ஊழியர் சங்கத்தின் (ஐஐடிஇஏ) வழக்கறிஞரும் கூட்டுக்குழு உறுப்பினருமான குழு உறுப்பினருமான அவனி சோக்சி கூறுகையில், ‛‛ஊழியர்கள் சரியான தகுதி பெறவில்லை என்று கூறியே பணியில் இருந்து ராஜினாமா செய்ய வைக்க நிறுவனங்கள் முயல்கின்றன'' என்று கவலை தெரிவித்துள்ளார்.
இதுபற்றி வழக்கறிஞர் மஹிமா மீனாட்சி என்பவர் கூறுகையில், ‛‛கடந்த செப்டம்பர் மாதம் முதல் 15 ஐடி ஊழியர்கள் என்னை அணுகி உள்ளனர். நிறுவனங்கள் மீதான அதிருப்தியில் அவர்கள் என்னை தொடர்பு கொண்டுள்ளனர். பணியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பணி நீக்கம் செய்து சம்பளம், அனுபவ சான்று தரமாட்டோம் என்று மிரட்டுவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
சிலருக்கு சம்பளம் கூட நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அலுவலகம் சார்ந்த இணையதளத்தை அவர்களால் அணுக முடியாமல் செய்யப்படுகிறது'' என்று கவலை தெரிவித்துள்ளார். இதனால் பெங்களூர் ஐடி ஊழியர்களில் ஒரு பகுதியினர் டார்ச்சரை எதிர்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications