Jayalalithaa Asset Case: 27 கிலோ நகை.. ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக போலீசிடம் ஒப்படைக்க பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு
பெங்களூரு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ தங்கம், வெள்ளி, வைர நகைகள், 1562 ஏக்கர் நிலத்துக்கான ஆவணங்கள் ஆகியவற்றை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் 24 ஆண்டுகளுக்கு பிறகு அவரது பொருட்கள் பெங்களூரில் இருந்து தமிழகம் வர உள்ளது.
தமிழக முதல்வராக இருந்து மறைந்தவர் ஜெயலலிதா. அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்தார். இவர் தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் சிக்கினார். ஜெயலலிதா மட்டுமின்றி அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக வழக்கை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து அனைவருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த சிறை தண்டனையை கர்நாடகா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் 4 ஆண்டு சிறை தண்டனையை சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்தது.
ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயலலிதா மரணமடைந்தார். இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்தனர். தண்டனை காலம் முடிவடைந்த நிலையில் அவர்கள் 3 பேரும் விடுதலையாகினர்.
இதற்கிடையே தான் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் அனைத்தும் கடந்த 2004ம் ஆண்டு கர்நாடகா அரசு கருவூலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்கு வழக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் அங்கு கொண்டு செல்லப்பட்டது.பெங்களூரில் உள்ள அரசு கருவூலத்தில் இந்த பொருட்கள் உள்ளது. இந்த கருவூலத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான சேலைகள், 750 ஜோடி காலணிகள், கைக்கடிகாரங்கள், தங்க, வைர நகைகள் இருக்கின்றன.
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ நகைகள், 1,562 ஏக்கர் நிலப்பத்திரம் ஆகியவற்றை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க பெங்களூர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் 14, 15 ஆகிய தேதிகளில் இந்த பொருட்களை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். ஒப்படைக்கும் முன்பு அனைத்து பொருட்களையும் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த நகை உள்பட பிற ஆவணங்களை எப்படி பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்பது தொடர்பாகவும் வழிக்காட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் 6 பெட்டிகளுடன் பெங்களூர் வர வேண்டும். நகைகளை பாதுகாப்பாக எடுத்து செல்ல தேவையான பாதுகாப்புடன் வர வேண்டும். நகைகளை மதிப்பீடு செய்ய மதிப்பீட்டாளர்கள் இருக்க வேண்டும். மதிப்பீடு செய்த பிறகே நகைகள் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் வழங்க வேண்டும். இந்த பணிக்கு கர்நாடகா போலீசார் தேவையான பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications