பாஜகவுடன் சேரப் போகுதா ஜேடிஎஸ்.. தீயாய் பரவிய தகவல்.. பதறியடித்து வந்த குமாரசாமி!
பெங்களூரு: மதச்சார்பற்ற ஜனதாதளத்தை கலைத்து விட்டு பாஜகவில் சேரப் போவதாக வந்த தகவலை மறுத்துள்ளார் அதன் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி.
கர்நாடகாவில் தற்போது எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் எதிர்க்கட்சிகளாக உள்ளன.

இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பசவராஜ் ஹொராட்டி நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாஜக தற்போது மிகவும் வலுவாக உள்ளது. ஏனென்றால், பாஜகவுக்கும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கும் இடையே இயற்கையாகவே கூட்டணி உள்ளது" என்றார்.
அவரது இந்தப் பேச்சை தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கலைக்கப்பட்டு பாஜகவில் இணைக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் உலா வரத் தொடங்கின. இந்நிலையில் இது குறித்து முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான குமாரசாமி கூறுகையில், "பசவராஜ் ஹொராட்டி கூறியது அவரது சொந்த கருத்து. அது ஒன்றும் கட்சியின் முடிவு அல்ல. கட்சியில் இருக்கும் ஒவ்வொரு தலைவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். அதையெல்லாம் ஒட்டுமொத்த கட்சியின் கருத்தாக எடுத்துக்கொள்ளக் கூடாது. எங்கள் கட்சி எந்த தேசிய கட்சிக்கும் அடிபணியாது.
நான் முதல்வராக இருந்தபோதுகூட, பிரதமருடனான எனது உறவு நல்ல முறையிலேயே இருந்தது. எங்களுக்கு என தனி கொள்கைகளும் சித்தாந்தங்களும் உள்ளன. எனவே, எங்கள் கட்சியை எந்தவொரு தேசிய கட்சியுடனும் அல்லது பிராந்திய கட்சியுடனும் ஒன்றிணைக்க முடியாது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "அரசியல் நடவடிக்கைகள் என்பவை பாஜகவின் உள்கட்சி விஷயம். அதில் தலையிட நான் விரும்பவில்லை. கூட்டணி குறித்தும் கட்சியை இணைப்பது குறித்தும் நான் இப்போது சிந்திக்கவில்லை. அடுத்த 2.5 ஆண்டுகள் மிகக் கடுமையாக உழைத்து, தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதல்வராவதே இப்போது எனக்கு இருக்கும் ஒரே நோக்கம்" என்றார்.
காங்கிரஸ் மற்றும் பாஜக என இரு பெரும் கட்சிகளை மதச்சார்பற்ற ஜனதா தளம் எவ்வாறு சமாளிக்கும் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த குமாரசாமி, "இரு தேசிய கட்சிகளும் எங்களிடம் வந்ததை அனைவரும் பார்த்திருப்பீர்கள். அனைவருக்கும் எங்கள் கட்சியின் ஆதரவு தேவைப்பட்டது. ஆனால், காரியம் முடிந்தவுடன் எங்களை முதுகில் குத்துகின்றனர்" என்றார்.
2018ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் ஆதரவுடன் குமாரசாமி முதல்வரானார். இருப்பினும், அவரது ஆட்சி வெறும் 14 மாதங்களே நீடித்தது. ஆளும் கூட்டணியிலிருந்து 16 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை பாஜகவுக்கு அளித்ததால், குமாரசாமி ஆட்சி கடந்தாண்டு ஜூலை 23ஆம் தேதி கவிழ்ந்தது.












Click it and Unblock the Notifications