கர்நாடகாவில் இன்னும் 3 மாதத்தில் அரசியல் மாற்றம்.. குமாரசாமி சொன்ன ஒற்றை வார்த்தை.. ஆஹா இருக்குமோ?
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றாலும் கூட முதல்வர் பதவியை பெறுவதில் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே கடும் மோதல் இருந்தது. இந்நிலையில் தான் கர்நாடகா அரசியலில் இன்னும் 2 அல்லது 3 மாதத்தில் பெரிய மாற்றம் நிகழும் என ஜேடிஎஸ் கட்சியின் தலைவரும், மாஜி முதல்வருமான எச்டி குமாரசாமி புதிய குண்டை தூக்கி போட்டுள்ளார்.
கர்நாடகாவில் 224 தொகுதிகள் உள்ளன. ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இதில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பாஜக 66 இடங்களில் மட்டுமே கைப்பற்றி காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்தது. இதன்மூலம் தென்மாநிலங்களில் பாஜக ஆட்சி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் தொங்கு சட்டசபை அமையும். பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தன்னிடம் தான் உதவி கேட்க வேண்டும் என ஜேடிஎஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி கூறி வந்தார். அதாவது நாங்கள் தான் கிங்மேக்கராக மாறுவோம் என தெரிவித்து வந்தார்.
ஆனால் இந்த தேர்தலில் ஜேடிஎஸ் கட்சி பெரிய அளவில் சறுக்கலை சந்தித்தது. கடந்த 2018 தேர்தலில் 37 இடங்களில் வென்ற ஜேடிஎஸ் இந்த முறை வெறும் 19 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. குமாரசாமி ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா தொகுதியில் வெற்றி பெற்றார். அவரது மகன் நிகில் கவுடா ராமநகர் தொகுதியில் தோல்வியடைந்தார். மேலும் ஜேடிஎஸ்ஸின் கோட்டையாக கருதப்படம் ஓல்டு மைசூர் மாவட்டங்களில் மொத்தம் 58 தொகுதிகள் உள்ள நிலையில் ஜேடிஎஸ் 14 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதுதான் அந்த கட்சிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தான் தற்போது குமாரசாமி புதிய குண்டை தூக்கி போட்டுள்ளார். இதுபற்றி சென்னப்பட்டணாவில் வாக்காளர்களுக்கு நன்ற தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசியபோது குமாரசாமி கூறியதாவது: இந்த தேர்தலில் எங்கள் கட்சி பல இடங்களில் பின்னடைவை சந்தித்துள்ளது. இருப்பினும் கட்சி தொண்டர்கள் அச்சப்பட தேவையில்லை. இதுபோன்ற தோல்வி ஒன்றும் கட்சிக்கு புதிதில்லை. நேர்மையான உழைப்பாளிகளுடன், கடவுளின் ஆசீர்வாதமும் நம் கட்சிக்கு எப்போதும் உண்டு. இனி வரும் நாட்களில் நாம் இன்னும் தீவிரமாக செயல்படுவோம்.
மாநிலத்தில் புதிதாக காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. இந்த கட்சி தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல. இந்த திட்டங்களை செயல்படுத்த ஆண்டு ரூ.62 ஆயிரம் முதல் 70 ஆயிரம் கோடி வரை தேவைப்படுகிறது. இதை எங்கிருந்து பெற உள்ளனர்? என்பது தெரியவில்லை. இதனை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தற்போதைய அரசின் நாடகத்தை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள். இந்த அரசிடம் இருந்து நல்லாட்சியை எதிர்பார்க்க முடியாது. சுயமரியாதையை எதிர்பார்க்க முடியாது. இந்த அரசு பணத்தை கொண்டு வந்து அபிவிருத்தி செய்யும் என எதிர்பார்க்க முடியாது. அதோடு அக்டோபர் அல்லது நவம்பரில் இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் புதிய அரசியல் மாற்றம் ஏற்படும்'' என்றார்.
கர்நாடகாவில் முதல்வர் பதவியை கைப்பற்ற டிகே சிவக்குமார், சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் தான் சனிக்கிழமை தேர்தல் முடிவு வந்தாலும் 5வது நாளான நேற்று தான் சித்தராமையா முதல்வராக அறிவிக்கப்பட்டார். டிகே சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
இருப்பினும் முதல்வர் பதவி கிடைக்காத வருத்தத்தில் டிகே சிவக்குமார் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அமைய உள்ள காங்கிரஸ் அரசியல் சித்தராமையா அணி, டிகே சிவக்குமார் அணி என இருதரப்பாக செயல்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை மனதில் வைத்து தான் இன்னும் 2 அல்லது 3 ாதங்களில் அரசியல் மாற்றம் ஏற்படும் என குமாரசாமி தெரிவித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications