Thug Life படத்திற்கு கர்நாடகாவில் தடை உறுதி? கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க அமைச்சர் கெடு
பெங்களூர்: கன்னட மொழி தொடர்பாக நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால், கர்நாடகாவில் தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்கப்படும் என்று அம்மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி எச்சரிக்கை விடுத்துள்ளார். கமல்ஹாசனின் கருத்தை கன்னட மக்கள் ஒருபோதும் பொறுத்து கொள்ள மாட்டார்கள் என்று கூறிய சிவராஜ் தங்கடகி, தக் லைஃப் படத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் எழுதப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
நாயகன் படத்திற்கு பின் இயக்குநர் மணி ரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் தக் லைஃப். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற போது, சிறப்பு விருந்தினராக சிவராஜ் குமார் பங்கேற்றார். இந்த விழாவில் கமல்ஹாசன் பேசுகையில், ராஜ் குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம்.

தமிழில் இருந்து பிறந்த கன்னடம்
அதனால் இங்கு வந்துள்ளார். இதன் காரணமாக தான் எனது பேச்சை தொடங்கும் போது உயிரே.. உறவே.. தமிழே என்று தொடங்கினேன். தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம். அதனை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள் என்று தெரிவித்தார். கமல்ஹாசனின் இந்த பேச்சிற்கு கர்நாடகாவில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
சித்தராமையா கண்டனம்
கமல்ஹாசனின் கருத்துக்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, கமல்ஹாசனுக்கு கன்னட மொழி குறித்த வரலாறு தெரியவில்லை என்று பதில் அளித்துள்ளார். அதேபோல் கர்நாடகா மாநில பாஜக தலைவர் விஜயேந்திராவும் கண்டனம் தெரிவித்து, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இந்த விவகாரம் இரு மாநிலங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மன்னிப்பு
இந்த நிலையில் கமல்ஹாசன் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால், கர்நாடகாவில் தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்கப்படும் என்று அம்மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக சிவராஜ் தங்கடகி பேசுகையில், கன்னட மக்கள் குறித்து கமல்ஹாசன் தேவையில்லாத கருத்துகளை பேசி இருக்கிறார்.
கர்நாடகா அமைச்சர் கெடு
கன்னட மக்கள் இதனை ஒருபோதும் பொறுத்து கொள்ள மாட்டார்கள். தனது கருத்துக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், கர்நாடகாவில் அவரின் திரைப்படத்திற்கு தடை விதிக்கப்படும். இதுதொடர்பாக உடனடியாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் எழுதுவேன் என்று தெரிவித்துள்ளார்.
என்ன செய்வார் கமல்?
கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடகாவின் பெங்களூர், பெலகாவி, மைசூர், ஹூப்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அதேபோல் கன்னட அமைப்புகள் ஏராளமானவை கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்து, அவரின் பேனர்களை கிழித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் கமல்ஹாசனின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று தமிழக மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications