இந்தி தின கொண்டாட்டத்தால் கர்நாடகா பாஜக அரசுக்கு நெருக்கடி- கன்னட அமைப்பினரும் போர்க்கொடி!
பெங்களூர்: இந்தி தின கொண்டாட்டத்தால் கர்நாடகா பாஜக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தி தின கொண்டாட்டத்துக்கு எதிராக கன்னட அமைப்பினரும் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
செப்டம்பர் 14-ந் தேதி இந்தி மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இந்தி மொழி தினத்துக்கு வாழ்த்து தெரிவிக்கும் மத்திய அமைச்சர்கள், இந்தியை பிற மாநிலங்கள் மீது திணிக்கும் வகையில் கூறுவது சர்ச்சையாகவும் இருந்து வருகிறது.

இந்த ஆண்டில் இந்தி மொழி தினம், கர்நாடகாவில் பெரும் புயலைக் கிளப்பிக் கொண்டு இருக்கிறது. தேசிய மொழியாக இந்தியை திணிப்பதுதான் இந்தி திவாஸ் என்கிற இந்தி மொழி தினத்தின் நோக்கம். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும்தான் மத்திய அரசு கொண்டாட வேண்டும் என்பது கர்நாடகாவில் பொதுவாக முன்வைக்கப்படும் கோரிக்கை.
அண்மையில் டெல்லியில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல- ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறியிருந்தார். இதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்த ஆண்டும் கர்நாடகாவில் இந்தி மொழி தின கொண்டாட்டம் சர்ச்சையாகி உள்ளது. இன்று கர்நாடகா மாநில பாஜக அரசு இந்தி மொழி தினத்தை கொண்டாட உள்ளது. இதற்கு முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜேடிஎஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி, அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு அனுப்பிய கடிதம்: கர்நாடகாவில் இந்தி மொழி தினம் கொண்டாடுவது என்பது கன்னட மொழி பேசும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். கன்னட மொழி பேசும் மக்களின் வரிப்பணத்தில் எதற்காக இந்தி தினத்தை கொண்டாட வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் கர்நாடகாம் முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இப்பிரச்சனை தொடர்பாக கர்நாடகா கல்வி அமைச்சர் பிசி நாகேஷ் கூறியதாவது: தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியது அவசியம். தாய்மொழிக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும். அதேநேரத்தில் இந்தி உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளுக்கும் கூட முக்கியத்துவம் தர வேண்டும். கர்நாடகாவில் எதிர்க்கட்சிகள் இந்தி மொழி தினம் கொண்டாடுவதை அரசியலாக்குகின்றன. இவ்வாறு நாகேஷ் கூறினார். இந்நிலையில் கன்னட அமைப்பினரும் இந்தி மொழி தின கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு குரல் தெரிவித்துள்ளனர். இதனால் கர்நாடகாவில் ஆளும் பாஜகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications