"உக்ரைனில் கர்நாடக மாணவர் உயிரிழக்க நீட் தேர்வே காரணம்.." பட்டியல் போட்டு விளாசிய குமாரசாமி
பெங்களூர்: உக்ரைன் நாட்டில் கர்நாடகா மாணவர் ஒருவர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அம்மாநில முன்னாள் முதல்வர் இது தொடர்பாகக் கடுமையான வார்த்தைகளுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
உக்ரைன் போரில் கர்நாடகாவைச் சேர்ந்த இந்திய மாணவர் நவீன் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்நிலையில், வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்களில் 90 சதவீதம் பேர் இந்தியாவில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சிய அடையாதவர்கள் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறி சர்ச்சையைக் கிளப்பி இருந்தார்,

குமாரசாமி
இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, "மருத்துவம் படிக்க விரும்பும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கனவுகளைத் தகர்த்து வருகிறது நீட் நுழைவுத் தேர்வு. பெற்றோர் மற்றும் மாணவர்களின் மரணச் சிலையாக நீட் தேர்வு மாறியுள்ளது. இங்கு உயர்கல்வி என்பது பணம் உள்ளவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டு, பணம் இல்லாதவர்களுக்கு மறுக்கப்படுகிறது. தகுதி என்ற பெயரில் திறமையான ஆனால் பொருளாதார ரீதியாக நலிவடைந்த கிராமப்புற மாணவர்களுக்கு அநீதி இழைக்கும் நீட் தேர்வின் பிரதிபலிப்பே உக்ரைனில் நடைபெற்ற ஏவுகணை தாக்குதலில் பலியான மருத்துவ மாணவர் நவீனின் சோகமான மரணம்.

97% மதிப்பெண்
நவீன் எஸ்எஸ்எல்சியில் 96 சதவீதமும், பியூசியில் 97 சதவீதமும் மதிப்பெண் பெற்றவர். இந்த மதிப்பெண் பெற்றும் கூட இந்தியாவில் அவருக்கு மருத்துவ இடம் மறுக்கப்பட்டது. கிராமப் புறத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இந்தளவு மதிப்பெண் பெறுவது எளிதானது அல்ல, இருந்தும் அவருக்கு மருத்துவ சீட் மறுக்கப்பட்டது. இதையடுத்து , நவீன் தனது கனவை நனவாக்கி மருத்துவராக ஆக உக்ரைன் சென்றார். அவரது மரணம் இந்தியாவின் மனசாட்சியைக் கேள்வி கேட்க வைத்துள்ளது. இதற்கு யார் பொறுப்பு?

கனவாகி விட்டது
நீட் தேர்வு கொண்டு வரப்பட்ட பின்னர் ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு மருத்துவக் கல்வி என்பது கனவாகி விட்டது. காளான்களை போல முளைத்துள்ள நீட் பயிற்சி மையங்கள் மாணவர்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய்களைப் பறிக்கிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 99% மாணவர்கள் டியூன் சென்டர்களில் படித்தவர்களே. அரசு மற்றும் கிராமப்புற மாணவர்கள் இந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது சாத்தியமில்லை. இந்த உண்மையை உணர்ந்தே, நீட் பயிற்சி மையங்கள் தங்கள் சந்தையை விரிவுபடுத்துகின்றன. நவீன் போன்ற மாணவர்களின் சடலங்களில் நடனமாடுகின்றன. பணக்காரர்களுக்கு மட்டும் உயர்கல்வி அளிக்கும் நீட் தேர்வுக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்.

மத்திய அமைச்சர்
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளிநாட்டில் மருத்துவக் கல்வி பெறும் 90% மாணவர்கள் இந்தியாவில் நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் என்று கூறியுள்ளது ஆச்சரியமாக இருக்கிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மருத்துவக் கல்விக்கு ஆகும் செலவு குறித்து இப்போது ஒப்பிட்டுப் பேச இது நேரமில்லை என்றும் அவர் கூறுகிறார். புதிய சர்ச்சைக்கு வழிவகுக்கும் மருத்துவக் கல்விக்கான செலவை ஒப்பிட விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இப்படிக் கூறும் உங்கள் நோக்கம் என்ன? இது பல யூகங்களுக்கு வழிவகுக்கிறது.
Recommended Video

எத்தை மாணவர்கள் இறக்க வேண்டும்
நீட் பயிற்சிகளுக்குப் பின்னால் இருப்பது யார்? மத்திய அரசு இவர்களுக்கு ரகசிய ஆதரவு அளிக்கிறதா? நீட் அராஜகத்தால் இன்னும் எத்தனை மாணவர்கள் இறக்க வேண்டும்? நீட் தேர்வின் நோக்கத்தையே நவீன் மரணம் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. ஏழைகள் ரத்தத்தை உறிஞ்சி பணக்காரர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட மருத்துவக் கல்வி முறை நாட்டுக்கே அவமானம். புதிய கல்விக் கொள்கையைப் குறித்து தம்பட்டம் அடிக்கும் மத்திய அரசு ஒருமுறை இதயத்திலிருந்து சிந்திக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications