கர்நாடகாவில் காங்கிரஸ் அலை.. பாஜக படுதோல்வி.. படுத்தேவிட்ட மஜத!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 10 ஆம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் நேற்று எண்ணப்பட்டன. சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
தபால் வாக்குகளில் பாரதிய ஜனதா முன்னிலை பெற்றது. ஆனால், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண தொடங்கியதில் இருந்தே நிலைமை மாற தொடங்கியது. துவக்கத்தில் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் போட்டி நிலவியது. ஆனால், ஒவ்வொரு சுற்றுக்களாக போக போக காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று வந்தன.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுக்கொண்டே வந்ததால் பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை தாண்டி காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற தொடங்கியது. பாஜக 100- தொகுதிகளையாவது நெருங்கும் என அக்கட்சியினர் நம்பிக் கொண்டு இருந்த நிலையில், நேரம் செல்ல செல்ல பாஜக எண்ணிக்கை 70-க்கும் கீழ் வந்தது. இறுதியில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது. பாஜக 65 இடங்களிலும், குமாரசாமியின் மதசார்பற்ற ஜனாதா தளம் 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. கிங் மேக்கர் கனவும் வலம் வந்த குமாரசாமிக்கு தேர்தல் முடிவு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சுயேட்சைகள் இரண்டு தொகுதிகளில் பிற கட்சிகள் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஜெய நகர் தொகுதியில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அந்த ஒரு தொகுதியில் மட்டும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சவுமியா ரெட்டி, பாஜக வேட்பாளர் ராமமூர்த்தியை விட 294 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். குறைந்த அளவு வாக்கு வித்தியாசமே இருப்பதால் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த ராம மூர்த்தி கேட்டுக்கொண்டதன் பேரில் வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அந்த தொகுதியில் மட்டும் முடிவுகள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி வெற்றி பெற்றுள்ள ஆட்சி அமைக்க அக்கட்சி தயாராகி வருகிறது. காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று மாலை 5.30 மணியளவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் முதல்வர் தேர்வு செய்யப்பட இருக்கிறார். சித்தராமையாவே முதல்வராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே, பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அக்கட்சியின் தேர்தல் வெற்றி விழா நடைபெற்றது. இதில் சித்தராமையா கலந்து கொண்டு பேசுகையில், தற்போது கிடைத்து இருப்பது காங்கிரசின் வெற்றி மட்டுமல்ல, 7 கோடி கன்னடர்களின் வெற்றி. பாரதிய ஜனதா கட்சி எப்போதும் மக்களின் ஆதரவில் ஆட்சிக்கு வந்தது கிடையாது.
எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்தனர். கூட்டணி ஆட்சி அமைந்தால் நிலையான ஆட்சியை வழங்க முடியாது. அதனால் கர்நாடக மக்கள் இந்த முறை ஒரே கட்சிக்கு தனிப்பெரும்பான்மை பலத்தை வழங்க வேண்டும் என்று கருதி, காங்கிரசை அதிக தொகுதிகளில் வெற்றி பெற வைத்துள்ளனர்.நாம் மக்களுக்கு 5 முக்கியமான வாக்குறுதிகளை கொடுத்துள்ளோம். அந்த 5 வாக்குறுதிகளையும் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே நிறைவேற்றுவோம்" என்றார்.












Click it and Unblock the Notifications