ஜாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல், சித்தராமையா முதுகில் குத்தும் டிகே சிவகுமார்- கர்நாடகாவில் 'ஷாக்'!
பெங்களூர்: கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைக்கு துணை முதல்வர் டிகே சிவகுமார், உயர் கல்வி அமைச்சர் சுதாகர் உள்ளிட்டோர் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர்.
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது இப்போது காங்கிரஸின் பிரதான கொள்கையாகிவிட்டது. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்த வேண்டும்; மத்திய அரசு பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரதிநிதித்துவம் என்ன என்பதை விளக்க வேண்டும் என்பது எல்லாம் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, லோக்சபாவில் விளாசிய கேள்விகள்.

பீகார் ஜாதிவாரி கணக்கெடுப்பு: பீகாரில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள ஜேடியூ- ஆர்ஜேடி கூட்டணி அரசாங்கம் வெற்றிகரமாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விவரங்களை அறிவித்தது. அத்துடன் பீகாரில் இடஒதுக்கீடு அளவையும் உயர்த்தியது. தற்போது நடைபெற்று வரும் 5 மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸின் பிரதான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகவும் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.
ஒக்கலிகா எதிர்ப்பு: இதனால் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் என முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார். ஆனால் கர்நாடகாவின் பெரும்பான்மை ஜாதிகளான ஒக்கலிகா மற்றும் லிங்காயத்துகள் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. ஒக்கலிகா சங்கத்தினர், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக கையெழுத்து இயக்கமும் நடத்தி வருகின்றனர்.
கையெழுத்திட்ட தலைவர்கள்: ஒக்கலிகா ஜாதி சங்கம் நடத்தி வரும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் ஒக்கலிகா ஜாதியை சேர்ந்த துணை முதல்வர் டிகே சிவகுமார், உயர் கல்வி அமைச்சர் சுதாகர், முன்னாள் பிரதமர் தேவகவுடா, எஸ்.எம்.கிருஷ்ணா, மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே, எதிர்க்கட்சித் தலைவர் அசோகா, குமாரசாமி, சதானந்த கவுடா என பலரும் கையெழுத்திட்டுள்ளனர். காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஒக்கலிகா ஜாதியை சேர்ந்த தலைவர்கள் அத்தனை பேரும் ஒன்று திரண்டு ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டிருக்கின்றனர்.
டிகே சிவகுமார்: இது தொடர்பாக கருத்து தெரிவித்த துணை முதல்வர் டிகே சிவகுமார், ஒக்கலிகா ஜாதியினரைப் போலவே பழங்குடிகள், பஞ்சமசாலி லிங்காயத்துகள், வீரசைவர்கள் என பல ஜாதியினருமே ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை எதிர்க்கின்றனர் என்றார்.
சித்தராமையா: ஒக்கலிகா ஜாதியினரின் எதிர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் சித்தராமையா, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்னரே ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? முதலில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை தாக்கல் செய்வோம். அமைச்சரவையில் விவாதிப்போம். அப்புறம் இதை பற்றி ஆராய்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications