கர்நாடகா இடைத்தேர்தல்: பாஜகவில் இருந்து அதிருப்தி வேட்பாளர்கள் 2 பேர் அதிரடி நீக்கம்
பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சைகளாக போட்டியிட்ட பாஜகவின் சரத் பச்சேகவுடா, கவிராஜ் அர்ஸ் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஹொசகோட்டை தொகுதியும் ஒன்று. இத்தொகுதியில் கடந்த தேர்தலில் சரத் பச்சேகவுடா போட்டியிட்டு காங்கிரஸின் நாகராஜிடம் தோல்வியைத் தழுவினார்.

தற்போது நாகராஜ் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். அவரையே ஹொசகோட்டை தொகுதி பாஜக வேட்பாளராகவும் கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரத் பச்சேகவுடா அத்தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட மனுத் தாக்கல் செய்துள்ளார். அவருக்கு ஜேடிஎஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதேபோல் விஜயநகரா தொகுதியில் மற்றொரு முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த்சிங் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து கவிராஜ் அர்ஸ் சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்தார்.
இந்த இருவரும் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற வேண்டும் என பாஜக மேலிடம் அறிவுறுத்தியது. ஆனால் இதனை நிராகரித்ததால் சரத் பச்சேகவுடா, கவிராஜ் அர்ஸ் இருவரையும் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications