தேதியே இன்னும் குறிக்கல.. கர்நாடகா தேர்தலில் வேட்பாளர்களை இறக்கிய ஆம்ஆத்மி.. திரும்பும் பாஜக, காங்.,
கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது.
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் கூட பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி 80 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இது பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு புது தலைவலியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
கர்நாடகாவில் வரும் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் தேதி அறிவிக்கவில்லை. இருப்பினும் தேர்தல் ஆணையம் சார்பில் அதிகாரிகள் கர்நாடகா வந்து விசிட் செய்துவிட்டு சென்றுள்ளனர். இதனால் விரைவில் கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த முறை கர்நாடகாவில் நான்கு முனை போட்டி நிலவ உள்ளது. அதன்படி ஆளும் பாஜக, எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ், ஜேடிஎஸ் என்ற ஜனதாதளம்(எஸ்) மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சிகள் இடையே போட்டி கடுமையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதுதவிர ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி உள்பட பிற கட்சிகளும் களம் காண்கின்றன.

தேதி அறிவிப்பு முன்பே..
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 113 இடங்களில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இதனால் தனிப்பெரும்பான்மையை பெற்று ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், இழந்த ஆட்சியை மீட்க காங்கிரஸ் கட்சியும் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் அனைத்து கட்சிகளும் தேர்தலையொட்டி மாநிலத்தில் யாத்திரைகள் நடத்தி வருகின்றன. இதனால் தேர்தல் தேதி அறிவிப்பு முன்பே கர்நாடகாவில் தேர்தல் ஜூரம் தொடங்கிவிட்டது.

ஆம்ஆத்மி வேட்பாளர் பட்டியல்
மேலும் பாஜகவில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை முதற்கட்டமாக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மாறாக ஜேடிஎஸ் கட்சி சார்பில் 90க்கும் அதிகமான தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆம்ஆத்மி கட்சி சார்பில் இந்த தேர்தலில் 224 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் தற்போது முதற்கட்டமாக 80 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகருக்கு வாய்ப்பு
அதன்படி முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பிரிஜேஷ் காலப்பா பெங்களூர் சிக்பேட்டை தொகுதியிலும், ஊழலுக்கு எதிராக போராடிய முன்னாள் கர்நாடக அரசு அதிகாரியான மாதை சாந்திநகரிலும், சினிமா நடிகர் டென்னிஸ் கிருஷ்ணா துமகூரு மாவட்டம் துருவக்கெரே தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். மேலும் பெங்களூர் ராஜாஜி நகர் தொகதியில் பிடி நாகண்்ணா, சிவி ராமன் நகர் தொகுதியில் மோகன் தாசரி, மகாலட்சுமி லேஅவுட் தொகதியில் சாந்தலா தம்ளே, பத்மநாபநகர் தொகுதியில் அஜய் கவுடா போட்டியிட உள்ளனர். இந்த தேர்தல் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில் 50 சதவீதம் பேர் 45 வயதுக்கு உட்பட்டவர்களாவார்கள். மேலும் முதற்கட்ட பட்டியலில் 7 விவசாயிகளுக்கும், 7 பெண்களுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாஜக, காங்கிரசுக்கு தலைவலி
பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியிடம் ஆம்ஆத்மி ஆட்சியை பிடித்த நிலையில் கோவா, குஜராத், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஆம்ஆத்மி கட்சி பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலை அளித்தது. குஜராத்திலும் ஆம்ஆத்மி கட்சி சில தொகுதிகளை கைப்பற்றியது. தற்போதைய சூழலில் காங்கிரஸ், பாஜகவுக்கு டப் கொடுக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆம்ஆத்மி கட்சி செயல்பட தொடங்கி உள்ளது. இது பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ள நிலையில் தான் கர்நாடகாவில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications