அனல் பறக்கும் கர்நாடக சட்டசபை தேர்தல்.. தமிழக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளராக நியமனம்
பெங்களூரு: கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தை சேர்ந்த 11 ஐஏஎஸ், 2 ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் அனைவரும் பல்வேறு மாவட்டங்களில் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் வரும் 10ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு வியூகங்களை வகுத்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பல தொகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். இதேபோல காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஆளும் பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. சட்டசபை தேர்தலை எந்தவித பிரச்னைக்கும் இடம் அளிக்காமல் அமைதியாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து தேர்தல் பார்வையாளர்களாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த 11 ஐஏஎஸ் அதிகாரிகள், 2 ஐபிஎஸ் அதிகாரிகள் என 13 பேர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது, தமிழக மதுவிலக்கு துறை எஸ்.பி.வருண்குமார் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள், தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரியம் தலைவர் சங்கர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கமிஷனர் சம்பத் மற்றும் ஐஏஏஸ் அதிகாரிகள் மலர்விழி, வீரராகவராவ், சோபானா உள்பட 11 ஐஏஎஸ் அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த 13 அதிகாரிகளும் கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர். வடகர்நாடகாவில் 5 பேரும், தென்கர்நாடகாவில் 6 பேரும் அனுப்பப்பட்டுள்ளனர். இந்த 13 அதிகாரிகளும் அங்கு தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிகாரிகள் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் கர்நாடகாவில் நடக்கும் அனைத்து செயல்பாடுகளையும் தேர்தல் ஆணையத்துக்கு உடனுக்குடன் தெரிவிப்பார்கள்.












Click it and Unblock the Notifications