"கர்நாடகாவில் பிறக்க விரும்பியவர் எஸ்பிபி..ராஜ்குமாரின் ஆன்மா" கர்நாடக சட்டசபையில் இரங்கல் தீர்மானம்
பெங்களூர்: திரைப்படப் பாடகர், எஸ்பி பாலசுப்ரமணியம், மறைவுக்கு கர்நாடக சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கர்நாடக சட்டசபையின் மழைக்கால, கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று அவை கூடியதும் வழக்கமான அலுவல்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் மதியம் எஸ்பி பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் காலமான செய்தி சபாநாயகர் மூலமாக தெரியப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி, எஸ்பி பாலசுப்பிரமணியம் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வந்தார்.
இரங்கல் தீர்மானத்தின் மீது பேசிய சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி, எஸ்பி பாலசுப்ரமணியம், பல மொழிகளிலும் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியவர். நடிகராக, தயாரிப்பாளராக.. இப்படி பல துறைகளிலும் சாதனை படைத்தவர். ஒரே நாளில் 21 பாடல்களை பாடி சாதித்தவர் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, இரங்கல் தீர்மானம் மீது பேசிய சட்டத்துறை அமைச்சர், மாதுசாமி, எஸ்பிபி, கன்னட மொழி மற்றும் கர்நாடகாமீது, மிகுந்த, நன்மதிப்பு வைத்திருந்தார். கலைத்துறைக்கு வரக்கூடிய பலருக்கும், பாலசுப்பிரமணியம் ஒரு கலங்கரை விளக்கம் அடுத்த ஜென்மத்தில், கர்நாடகாவில், நான் பிறக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியவர் எஸ்பி பாலசுப்ரமணியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இரங்கல் தீர்மானத்தின் மீது, பேசிய எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா, ஆந்திர பிரதேசத்தில் பிறந்த எஸ்பி பாலசுப்பிரமணியம், கன்னடம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
கன்னடத்தில் முன்னணி நடிகர்கள், ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களின் படங்களிலும், பின்னணி பாடியுள்ளார். பாலசுப்பிரமணியம் தான் ஆத்மா, நான் வெறும் உடல் தான், என்று ராஜ்குமாரால் பாராட்டப் பட்டவர்தான். இவ்வாறு சித்தராமையா பேசினார்.












Click it and Unblock the Notifications