கோபம்.. பெண்ணின் கன்னத்தில் ‛பளார்’ விட்ட பாஜக அமைச்சர் சோமண்ணா.. கர்நாடகாவில் பரபரப்பு
பெங்களூர்: கர்நாடகாவில் குறைகளை கூறச்சென்ற பெண்ணை கன்னத்தில் பளார் என பாஜக அமைச்சர் சோமண்ணா அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் பொதுமக்கள் கடும் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். அடுத்த ஆண்டு அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தற்போது மக்கள் நலத்திட்டங்களை பாஜக அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
அதேநேரத்தில் கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியும் திட்டமிட்டு பணி செய்து வருகிறது.

பாஜக தீவிரம்
கர்நாடகாவில் பாஜகவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட மேலிட தலைவர்கள் பலரும் கர்நாடகத்தில் அடிக்கடி சுற்றுப்பபயணம் செய்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியும் அடுத்தமாதம் கர்நாடகா சென்று ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவரின் ஓட்டுக்களை கவரும் வகையில் அந்த சமுதாயத்தை சேர்ந்த கெம்பேகவுடாவின்(பெங்களூரை நிர்மாணித்தவர்) சிலையை திறந்து வைக்க உள்ளார். இந்த சிலை 108 அடி உயரத்தில் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தின் வளாதகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சோமண்ணா
இது ஒருபுறம் இருக்க மாநில அமைச்சர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து துறை சார்ந்த திட்டங்களை துவக்கி வைத்து வருகின்றனர். கர்நாடகா மாநில வீட்டு வசதித்துறை அமைச்சராக இருப்பவர் சோமண்ணா. இவர் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். சாம்ராஜ் நகர் மாவட்டம் குண்டலுப்பேட்டை தாலுகா ஹங்கலா கிராமத்தில் நேற்று மாலையில் நடந்த நிகழ்ச்சியில் சோமண்ணா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் 175 பேருக்கு உரிமை பத்திரம் வழங்கப்பட்டது.

குறைகளை கூறிய பெண்
அப்போது கெம்பம்மா என்ற பெயர் கொண்ட பெண்ணுக்கு உரிமை பத்திரம் வழங்கப்படவில்லை. இதையடுத்து அமைச்சரிடம் குறைகளை கூற முடிவு செய்தார். இதற்காக அவர் மேடையில் ஏறினார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை தடுத்தனர். இருப்பினும் கெம்பம்மா அமைச்சரை நோக்கி சென்றார். இந்த வேளையில் உரிமை பத்திரம் கோரி அந்த பெண் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே விண்ணப்பம் செய்தார். ஆனால் இன்று வரை கிடைக்கவில்லை. இதனால் உரிமை பத்திரம் வாங்க உதவி செய்ய வேண்டும் என கொஞ்சம் சத்தமாக கூறினார்.

பெண்ணை தாக்கிய அமைச்சர்
இதனை பார்த்த அமைச்சர் சோமண்ணா திடீரென்று அந்த பெண்ணின் கன்னத்தில் பளார் என அடித்தார். இதையடுத்து அந்த பெண் அமைச்சரின் காலில் விழுந்து தனக்கு எப்படியாவது உரிமை பத்திரம் வழங்க உதவுங்கள் என கெஞ்சினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு இருந்த போலீசார் வேகமாக வந்து பெண்ணை அங்கிருந்து அழைத்து சென்றனர்.
இதற்கிடையே அமைச்சர் சோமண்ணா, அந்த பெண்ணை கைநீட்டி கன்னத்தில் அடித்ததை சிலர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இதையடுத்து அமைச்சர் சோமண்ணாவின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உடனடியாக அமைச்சரவையில் இருந்து இவரை நீக்க வேண்டும் என சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications