தூக்கி வீசப்பட்ட ரூ.50,000.. ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய கர்நாடகா பாஜக எம்எல்ஏ.. சிக்கியது எப்படி?
பெங்களூர்: கர்நாடகாவில் காண்ட்ராக்டரிடம் இருந்து ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியபோது பாஜக எம்எல்ஏ சந்துரு லமானி மற்றும் அவரது 2 உதவியாளர்களை லோக்ஆயுக்தா போலீசாரிடம் சிக்கினர்.
கர்நாடகாவின் கதக் மாவட்டம் ஷிரகட்டி சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் சந்துரு லமானி. பாஜகவை சேர்ந்த இவர் அடிப்படையில் டாக்டர் ஆவார்.

இந்நிலையில் தான் கதக் தாலுகா சிஞ்சலி கிராமத்தில் சிறிய நீர்ப்பாசனத்துறையின் கீழ் 2 பணிகளுக்கு அனுமதி கோரி காண்ட்ராக்டர் விஜய் பூஜார் சென்றார்.
அப்போது சந்துரு லமானி ரூ.11 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார். ரூ.11 லட்சம் லஞ்சமாக தந்தால் அனுமதி தரப்படும்.இல்லாவிட்டால் அனுமதி கிடைக்காது என்று கூறியுள்ளார். ஆனால் காண்ட்ராக்டர் விஜய் பூஜார் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. இதனால் அவர் லோக்ஆயுக்தா போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து லோக்ஆயுக்தா போலீசாரின் அறிவுரைப்படி காண்ட்ராக்டர் விஜய் பூஜார் எ லட்சுமேஸ்வர் டவுனில் உள்ள எம்எல்ஏவுக்கு சொந்தமான மருத்துவமனைக்கு சென்றார். மதியம் 2.15 மணிக்கு எம்எல்ஏ சந்துரு லமானியிடம் ரூ.5 லட்சத்தை முதற்கட்டமாக லஞ்சமாக வழங்கினார்.
இதனை எம்எல்ஏ சந்துரு லமானி வாங்கியபோது அங்கிருந்த லோக்ஆயுக்தா போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவருக்கு உதவியாக இருந்த உதவியாளர்கள் மஞ்சுநாத் வால்மிகி, குரு நாயக் ஆகியோரையும் போலீசார் பிடித்து சென்றனர். இந்த கைது நடவடிக்கையின்போது உதவியாளர் குரு நாயக் தனது கையில் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை மருத்துவமனைக்கு பின்னால் உள்ள பள்ளி காம்பவுண்ட்டுக்குள் வீசினார். பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
தற்போது கைதாகி உள்ள சந்துரு லமானிய முண்டகிரி தாலுகா திண்டூர் தாண்டா கிராமத்தை சேர்ந்தவர். இவர் முதலில் ஷிரகட்டியில் தாலுகா சுகாதார அதிகாரியாக பணியாற்றினார். கொரோனா சமயத்தில் அவரது சேவையை மக்கள் பாராட்டினர். மேலும் லட்சுமேஸ்வரா டவுனில் சொந்தமாக மருத்துவமனை கட்டினார்.
இவருக்கு கடந்த 2023 சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் சீட் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் தனது அரசு பணியை ராஜினாமா செய்ய கடிதம் வழங்கினார். ஆனால் அந்த கடிதம் ஏற்கப்படாமல் இருந்தது. இது சர்ச்சையானது. அதன்பிறகு தேர்தலில் களமிறங்கிய சந்து லமானி 28 ,520 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திடீரென்று மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று அரசியலில் எழுச்சி கண்ட சந்துரு லமானி தற்போது ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications