பலாத்கார வழக்கில் சிக்கிய கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா மீது சரமாரி முட்டை வீச்சு- 3 பேர் கைது
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வான முனிரத்னா மீது முட்டைகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பலாத்கார வழக்கில் சிக்கிய முனிரத்னா மீது முட்டைகளை வீசியதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 பேர் பெங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பாஜகவினர் வாகனங்கள் மீது கற்களை வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா. காங்கிரஸ் கட்சியில் முனிரத்னா இருந்த போது பாஜகவுக்கு தாவியவர். இவரால்தான் முந்தைய காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. பாஜக ஆட்சியில் அமைச்சராக இருந்தார். பலாத்கார வழக்கில் முனிரத்னா கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி உள்ளார்.

இந்த நிலையில் தமது சட்டசபை தொகுதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 100-வது பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் நேற்று முனிரத்னா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிகளை நிறைவு செய்து வீட்டுக்குப் புறப்பட்ட முனிரத்னா மீது திடீரென முட்டைகள் வீசப்பட்டன. இந்த முட்டைகள் முனிரத்னா தலையில் விழுந்து உடைந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல சரமாரியாக கற்களும் வீசப்பட்டன. இந்த தாக்குதல்களில் பாஜகவினரின் 3 கார்களும் சேதமடைந்தன.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முனிரத்னா, தம்மை கொல்ல சதி நடக்கிறது; ஆசிட் முட்டைகளை என் மீது வீசி இருக்கின்றனர் எனவும் குற்றம் சாட்டினார். இச்சம்பவம் குறித்து விசாரித்த போலீசார் 3 பேரை கைது செய்தனர். முனிரத்னா மீது முட்டை வீசி சிக்கிய 3 பேரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications