போட்டோவுக்காக இப்படியா? ராமர் சிலை மீது கால் வைத்து அவமரியாதை .. கர்நாடக பாஜக எம்எல்ஏவால் சர்ச்சை
பெங்களூர்: ராமநவமி கொண்டாட்டத்தின்போது பப்ளிசிட்டி பெறும் வகையில் ராமர் சிலை மீது கால்வைத்த ஏறி கர்நாடக பாஜக எம்எல்ஏ சரணு சலகார் அவமரியாதை செய்ததாக வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சரணு சலகாரின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவர் விளக்கம் அளித்து கட்சி தொண்டர்களை மாட்டி விட்டுள்ளார்.
கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் ஓட்டுகள் மே 13ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
கர்நாடகாவை பொறுத்தமட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வைக்க பாஜக, இழந்த ஆட்சியை மீட்க காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளும், புதிதாக ஆம்ஆத்மி கட்சியும் களம் கண்டுள்ளது. இதனால் ஒவ்வொரு எம்எல்ஏக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் தற்போது தீவிரமாக தேர்தல் பணியாற்ற துவங்கி உள்ளனர்.

பீதர் எம்எல்ஏ சரணு சலகார்
இந்நிலையில் தான் பீதர் மாவட்டம் பசவகல்யான் சட்டசபை தொகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ சரணு சலகார் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது நேற்று முன்தினம் ராமநவமி கொண்டாப்பட்டது. அப்போது பாஜக எம்எம்ஏ சரணு சலகார் அங்குள்ள ராமன் சிலைக்கு மாலை அணிவித்து வழிபட்டார். இந்த சிலை சுமார் 15 அடி உயரம் கொண்டது என கூறப்படும் நிலையில் மாலை அணிவிக்கும் வகையில் ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை.

சிலை மீது கால்வைத்து..
இதனால் சரணு சலகார் ராமர் சிலையின் மீது கால்வைத்து மிதித்து ஏறி ராமருக்கு துளசி மாலை அணிவித்தார். அதன்பிறகு சிலை மீது நின்றபடியே போட்டோவுக்கும் போஸ் கொடுத்தார். இதுதொடர்பான போட்டோ, வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியானது. இது தான் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

பாஜக எம்எல்ஏ மீது விமர்சனம்
ராமனை மிதித்து அவமரியாதை செய்ததாக பாஜக எம்எல்ஏ சரணு சலகார் மீது பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் காங்கிரஸ் கட்சியும் விமர்சனம் செய்துள்ளது. சரணு சலகார் ராமன் மீது கால் வைத்துள்ளார். இதுதான் பாஜகவின் இந்து தர்மத்தை பாதுகாக்கும் முறையா? என கேள்வி எழுப்பி உள்ளது. இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான மஹூவா மொய்த்ராவும், சரணு சலகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொண்டர்கள் மீது பழி
இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த நிலையில் பாஜக எம்எல்ஏ சரணு சலகார் அதுபற்றி விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛கட்சி தொண்டர்கள் வற்புறுத்தியதால் சிலை மீது நின்றேன். இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. யார் மனதும் புண்பட்டு இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்'' என மன்னிப்பு கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications