ஊரடங்கை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு... குதிரையில் பவனி வந்த எம்.எல்.ஏ.மகன்
பெங்களூரு: கர்நாடக மாநிலம் குண்டுலுபேட் எம்.எல்.ஏ.நிரஞ்சன் குமார் மகன் ஊரடங்கை மீறி நெடுஞ்சாலையில் குதிரையில் பவனி வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள குண்டுலுபேட் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பாஜகவை சேர்ந்த நிரஞ்சன் குமார். இவரது மகன் புவன் குமார் ஊரடங்கை மீறி மைசூரு-ஊட்டி நெடுஞ்சாலையில் குதிரையில் சுற்றித்திரிந்தது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும், புவன் குமார் குதிரையில் ஒரு இளவரசரை போல் பவனி வந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வரும் சூழலில் ஊரடங்கை முழுமையாக மக்கள் கடைபிடிக்க வேண்டும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக அறிவுரை வழங்கி வரும் நிலையில், அவரது கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரின் மகனே ஊரடங்கை பொருட்படுத்தாமல் நடந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசியுள்ள குண்டுலுபேட் பாஜக எம்.எல்.ஏ. நிரஞ்சன் குமார், ஊரடங்கின் போது குதிரையில் செல்லக்கூடாது என எந்த விதியும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், தாம் ஊரில் இல்லாததால் இந்த நிகழ்வு குறித்து தமக்கு முழுமையான தகவல் தெரியவில்லை என்றும், என்ன நடந்தது என்பது பற்றி மகனிடம் விசாரித்து அதில் தவறு இருந்தால் நிச்சயம் அதனை மகனிடம் சுட்டிக்காட்டுவேன் எனவும் கூறியுள்ளார்.
இதனிடையே மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்பு மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ. வாசு, பெங்களூர் ஹொன்னவர் நெடுஞ்சாலையில் தனது பேரனுடன் ரிமோட் கன்ட்ரோல் காரை வைத்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications