சிஎம் மனைவிக்கு 14 மனைகள் ஒதுக்கீடு-போராட்டம் அறிவித்த பாஜக! பத்திரிகையாளர்களிடம் சீறிய சித்தராமையா!
பெங்களூர்: கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா மனைவிக்கு மைசூர் வளர்ச்சி ஆணையம் 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் பாஜக வரும் 12-ந் தேதி மைசூரில் பிரம்மாண்ட போராட்டம் அறிவித்துள்ளது. கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா பதவி விலகக் கோரி இந்தப் போராட்டம் நடைபெற இருக்கிறது.
மைசூர் வளர்ச்சி ஆணையம் “மூடா” - MUDA .. இது அரசு நிறுவனம். இந்நிறுவனமானது கையகப்படுத்தும் நிலத்துக்காக வீட்டு மனைகள் கொடுக்கப்படும். சித்தராமையாவின் மனைவி பார்வதி பெயரிலான 3.16 ஏக்கர் நிலத்தை மூடா கையகப்படுத்தியது. இதற்காக சித்தராமையா மனைவிக்கு மொத்தம் 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன.

கர்நாடகாவில் அரசியல் புயல்: இந்த வீட்டு மனைகள் விவகாரம் கர்நாடகா அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. முதல்வர் சித்தராமையா மனைவிக்கு அரசு தரப்பில் வீட்டு மனைகள் ஒதுக்கியது சட்டவிரோதமானது; முறைகேடானது என்கிறது பாஜக. காங்கிரஸ் கட்சியில் உள்ள துணை முதல்வர் டிகே சிவகுமாரின் ஆதரவாளர்களும் சித்தராமையாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். ஆனாலும் தம் மீதான குற்றச்சாட்டுகளை சித்தராமையா மறுத்து வருகிறார்.
பாஜக போராட்டம் அறிவிப்பு: இந்த நிலையில் மைசூரில் நாளை மறுநாள் சித்தராமையா பதவி விலக வலியுறுத்தி பிரம்மாண்ட போராட்டம் நடத்தப்படும் என பாஜக அறிவித்துள்ளது. இது தொடர்பாக கர்நாடகா மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா கூறுகையில், சட்டவிரோதமாக வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்ததைத் திரும்பப் பெற வேண்டும். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும். இதனை வலியுறுத்திதான் மைசூர் போராட்டம் நடத்தப்பட இருக்கிறது என்றார்.
மனைவிக்கு மனை ஒதுக்கீடு.. சித்தராமையா சிஎம் சீட்டுக்கு 'வேட்டு' வைக்கும் பாஜக!
எத்தனை முறை விளக்கம் தருவது?: இதனிடையே சாம்ராஜ் நகர் செல்லும் வழியில் மைசூர் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை முதல்வர் சித்தராமையா சந்தித்தார். இந்த சந்திப்பின் போது மூடா விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சித்தராமையா கோபம் அடைந்தார். மேலும், மூடா விவகாரம் குறித்து எத்தனை முறைதான் நான் விளக்கம் தருவது? என் மனைவி பார்வதிக்கு வீட்டு மனை ஒதுக்கப்பட்டதை எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும்தான் தேவை இல்லாமல் பெரிதுபடுத்திக் கொண்டே இருக்கின்றன. என் மனைவிக்கு தெரியாமல் மூடா சட்டவிரோதமாக நிலம் கையகப்படுத்தியது. இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த போது மூடா மன்னிப்பு கேட்டது. அதற்கு நட்ட ஈடாகவே வீட்டு மனைகளை கொடுத்தது. நாங்களா விஜயநகர் லே அவுட்டில் வீட்டு மனைகளைக் கேட்டோம்? மூடாவில் முறைகேடுகள் எனில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் விசாரணை நடத்துவர். பாஜகதான் போராட்டம் நடத்துவதாக மிரட்டுகிறது என ஆவேசப்பட்டார் சித்தராமையா.
அமலாக்கத்துறை ரெய்டு: அப்போது, வால்மீகி வாரிய நிதி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் நாகேந்திரா, காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீடுகளில் சோதனைகள் மேற்கொண்டது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கும் பதிலளிக்க முடியாது என கோபப்பட்டார் முதல்வர் சித்தராமையா. அதாவது, அமலாக்கத்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எல்லாம் நான் எப்படி பதில் தருவது? இந்த சோதனைகள் பற்றி எல்லாம் நான் பதில் சொல்லவும் முடியாது. எங்களுக்கு இந்த சோதனை பற்றி கவலையும் இல்லை என்றார் சித்தராமையா.












Click it and Unblock the Notifications