தமிழ்நாடு பாணியில் கர்நாடகா- நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்- அமைச்சரவை ஒப்புதல்!
பெங்களூர்: தமிழ்நாடு அரசைப் போல கர்நாடகா மாநில அரசும் நீட் நுழைவுத் தேர்வில் இருந்து கர்நாடகாவுக்கு விலக்கு கோரும் தீர்மானத்தை அம்மாநில சட்டசபையில் நிறைவேற்ற இருக்கிறது. இந்த தீர்மானத்துக்கு முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடகா மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடகாவில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; கர்நாடகா மாநில அரசே பொது நுழைவுத் தேர்வு நடத்தி 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநில அரசே நடத்த அனுமதிக்க வேண்டும்; என வலியுறுத்துகிறது கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல் தந்த தீர்மானம்.
நீட் எதிர்ப்பில் தமிழ்நாடு: நீட் நுழைவுத் தேர்வு முறைக்கு தமிழ்நாடுதான் முதன் முதலில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நீட் நுழைவுத் தேர்வில் இருந்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவுடன் விலக்கும் பெற்றிருந்தது தமிழ்நாடு. பின்னர் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பால் அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு கட்டாயமானது.

நீட் விலக்கு மசோதாக்கள்: ஆனாலும் தமிழ்நாடு சட்டசபையில் நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும்; 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாநில அரசே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனாலும் தமிழ்நாடு சட்டசபையின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் மத்திய அரசு கிடப்பில்தான் போட்டு வைத்துள்ளது.
தமிழ்நாடு தீர்மானம் என்ன?: தமிழ்நாடு சட்டசபையில் கடந்த மாத இறுதியிலும் நீட் தேர்வுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அத்தீர்மானத்தில் கிராமப்புற ஏழையெளிய மாணவர்களின் மருத்துவக் கல்லூரி வாய்ப்புக்களை கடுமையாக பாதிக்கும் வகையில், பள்ளிக் கல்வியை அவசியமற்றதாக்கும் வகையில் மாநில மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் உரிமையை மாநில அரசுகளிடமிருந்து பறிக்கும் வகையில் அமைந்துள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும். இந்த தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்து பள்ளிக்கல்வியில் மாணவர்கள் பெறும் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்காக, இந்த சட்டமன்றப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வேண்டும். தொடர்ந்து, பல முறைகேடுகளுக்கு வழிவகுத்து வரும் இந்த நீட் தேர்வு முறையை பல்வேறு மாநிலங்களும் தற்போது எதிர்த்து வரும் நிலையிலும் தேசிய அளவில் நீட் தேர்வு முறை கைவிடப்படும் வகையில், தேசிய மருத்துவ ஆணை சட்டத்தில் தேவைப்படும் திரு்த்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கர்நாடகா சட்டசபையில் தீர்மானம்: தற்போது தமிழ்நாடு அரசு வழியில் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசும் நீட் தேர்வுக்கு எதிராக மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளது. கர்நாடகாவில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; கர்நாடகா மாநில அரசே பொது நுழைவுத் தேர்வு நடத்தி, 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநில அரசே நடத்த அனுமதிக்க வேண்டும் என்பதுதான் கர்நாடகா அரசு சட்டசபையில் நிறைவேற்ற இருக்கும் தீர்மானம். இந்த தீர்மானத்துக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலைமையிலான மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து கர்நாடகா சட்டசபையில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. ஏற்கனவே மகாராஷ்டிரா, கேரளா, மேற்கு வங்க மாநிலங்களும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications