EVM வேண்டாம்.. கர்நாடகா உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சீட்டை கொண்டு வர அமைச்சரவை ஒப்புதல்! ட்விஸ்ட்
பெங்களூர்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வரும் உள்ளாட்சி தேர்தல்களை வாக்குசீட்டு முறையில் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் பரிந்துரை செய்ய கர்நாடகா அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப்பதிவு மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்ததில் முறைகேடு நடப்பதாக தொடர்ந்து ராகுல் காந்தி குற்றம்சாட்டி வரும் நிலையில் கர்நாடகா காங்கிரஸ் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இது தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். இந்நிலையில் தான் பெங்களுர் விதானசவுதாவில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. முதல்வர் சித்தராமையா இந்த கூட்டத்துக்கு தலைமை வகித்தார்.

துணை முதல்வர் டிகே சிவக்குமார், அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தி்ல மாநிலத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடத்தப்படும் தேர்தல்களை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி முறைகேடு புகார்களை கூறி வருகின்றனர். வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் சட்டசபை தேர்தலின் ஓட்டுப்பதிவு தொடர்பாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதற்கிடையே தான் கர்நாடகா உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதற்கு பதில் வாக்குச்சீட்டை பயன்படுத்த கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
இதுபற்றி கர்நாடகா சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் எச்கே பட்டீல் விளக்கினார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛கர்நாடகாவில் உள்ள கிராம பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடத்தப்படும் தேர்தல்களை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதில் வாக்குச்சீட்டு முறையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சட்டத்தில் திருத்தம் செய்து, மாநில தேர்தல் ஆணையத்திற்கு சிபாரிசு செய்ய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை இழந்தது தான். அதனை மீட்டெடுத்து தேர்தல் நடைமுறையில் மக்களுக்கு நம்பிக்கையை கொண்டு வர வேண்டிய கடமை உள்ளது. இதனால் தான் கர்நாடகா உள்ளாட்சி தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது'' என்றார்.
ஆளும் காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவு தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. நம் நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது கர்நாடகா காங்கிரஸ் அரசு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை விட்டு வாக்குச்சீட்டு முறைக்கு மாறும் பட்சத்தில் அது எதிர்க்கட்சிகள் ஆளும் பிற மாநிலங்களிலும் எதிரொலிக்கலாம். இதனால் இந்த நடவடிக்கைக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தோல்வி பயத்தில் காங்கிரஸ் உள்ளது. இதனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது குற்றம்சாட்டி வாக்குச்சீட்டுக்கு மாற திட்டமிடுகிறது என பாஜக தலைவர்கள் சாடி உள்ளனர்.












Click it and Unblock the Notifications