பிற்படுத்தப்பட்டோராக முஸ்லிம்கள்.. கர்நாடகாவில் ஓபிசி இடஒதுக்கீடு 51% அதிகரிப்பு? ஆணையம் பரிந்துரை
பெங்களூர்: கர்நாடகாவில் ஜாதிவாரி கணக்கெடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பை மேற்கொண்ட ஆணையம் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கவும், ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 51 சதவீதமாக அதிகரிக்கவும் பரிந்துரை செய்துள்ளது. இது நடக்கும் பட்சத்தில் கர்நாடகாவில் இடஒதுக்கீடு என்பது 85 சதவீதமாக அதிகரிக்கும்.
கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். துணை முதல்வராக டிகே சிவக்குமார் செயல்பட்டு வருகிறார். இதற்கு முன்பு கடந்த 2013 - 2018 வரை காங்கிரஸ் முதல்வராக சித்தராமையா இருந்தார். அந்த சமயத்தில் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவரான ஜெயபிரகாஷ் ஹெக்டே தலைமையில் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் ரூ.160 கோடி செலவிடப்பட்டது. இந்த அறிக்கை கடந்த ஆண்டு சித்தராமையாவிடம் வழங்கப்பட்டது.
இது தற்போது கர்நாடகா அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்மீது விரைவில் அமைச்சரவை ஆலோசனை நடத்த உள்ளது. இதற்காக வரும் 17 ம் தேதி சிறப்பு அமைச்சரவை கூட்டத்துக்கு முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். அந்த ஆலோசனையை தொடர்ந்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. இதற்கிடையே தான் தற்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி பிற்படுத்தப்பட்ட சமுதாய (ஓபிசி) மக்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். தற்போது பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கான இடஒதுக்கீடு 32 சதவீதமாக உள்ளது. இதனை 51 சதவீதமாக உயர்த்த வேண்டும். பிற்படுத்தப்பட்ட சமுதாய பட்டியலில் முஸ்லிம்களும் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு தற்போது இருக்கும் 4 சதவீத இடஒதுக்கீட்டை 8 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். இதன்மூலம் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இது நடக்கும் பட்சத்தில் மாநிலத்தில் இடஒதுக்கீட்டின் அளவு என்பது 85 சதவீதமாக அதிகரிக்கும். அதாவது பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு, எஸ்சி, எஸ்டி மக்களுக்கான 24 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்டவற்றுடன் மொத்த இடஒதுக்கீடு என்பது 85 சதவீதமாக அதிகரிக்கும்.
மேலும் வேலைவாய்ப்புகளில் Horizontal இடஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் அதனை பயன்படுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவில் Vertical இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகள் அடங்கிய இந்த அறிக்கை மீது வரும் 17 ம் தேதி கர்நாடகா சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications