பாஜக அண்ணாமலை உண்ணாவிரதம் இருந்தால் இருக்கட்டும்.. எனக்கென்ன.. அதிர வைத்த பொம்மை
பெங்களூர்: மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது பற்றி கவலையில்லை என்றும் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு ரூ 9 ஆயிரம் கோடியில் அணை கட்ட முயற்சிக்கிறது. இதற்கு தமிழ்நாடு அரசும் விவசாய அமைப்புகளும் நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதற்கு எதிராக தமிழக அரசின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
காவிரியில் அணை
இந்த நிலையில் காவிரியின் குறுக்கே மேகாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கர்நாடகா முதல்வராக இருந்த எடியூரப்பா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும் காவிரியில் அணை கட்டினால் தமிழகத்தில் விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் அணை கட்டும் முடிவை கைவிடுமாறு ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியிருந்தார்.
காவிரியில் அணை
ஆனால் எடியூரப்பாவோ காவிரியில் அணை கட்டுவது எங்கள் உரிமை. நாங்கள் கட்டியே தீருவோம் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவரது வயது மூப்பை கருத்தில் கொண்டு தனது பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டார்.
முதல்வராக பதவிப்பிரமாணம்
இவராவது மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கு சாதகமாக இருப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அவரோ பதவிப்பிரமாணம் செய்த அன்றைய தினமே செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில் காவிரியில் கூடுதலாக உள்ள நீரை சரியான முறையில் பயன்படுத்தவே மேகதாது அணை கட்டப்படுகிறது. எனவே அணை விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு தெளிவானது. சட்டரீதியாக நாங்கள் சரியான பக்கத்தில்தான் உள்ளோம் என தெரிவித்திருந்தார்.
முதல் நாளிலேயே சலசலப்பு
முதல் பேட்டியிலேயே பசவராஜ் இப்படி பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில் மேகதாது அணையை கட்ட கர்நாடகா ஒரு செங்கல்லை கூட வைக்க முடியாது. கர்நாடகா முதல்வரின் பேச்சு தவறானது. கர்நாடகா அரசின் முடிவை எதிர்த்து ஆகஸ்ட் 5 ஆம் தேதி தஞ்சையில் தமிழக பாஜக விவசாய அணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
Recommended Video
உண்ணாவிரத போராட்டம்
இதுகுறித்து இன்றைய தினம் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில் மேகதாது அணையை கட்டியே தீருவோம். காவிரியில் கர்நாடகாவுக்கு உரிமை உள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் எதிர்ப்பு குறித்து எந்த கவலையும் இல்லை. யாராவது உண்ணாவிரதம் இருக்கட்டும் அல்லது உணவு உண்ணட்டும். அது பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. மேகதாது குறித்து அண்ணாமலை பேசியதற்கெல்லாம் பதிலளிப்பது என்னுடைய வேலையும் அல்ல என பதிலளித்துள்ளார் பசவராஜ்.