மண்டியா விவசாயிகள் பலன் பெற தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறப்பு.. குமாரசாமி செம பரிந்துரை
பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி பச்சைக்கொடி காண்பித்துள்ளார். காவிரியிலிருந்து தமிழகத்திற்கு, தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடக முதல்வர் பரிந்துரைத்துள்ளார்.
டெல்லியில் கடந்த மாதம் 25ம் தேதி மசூத் உசேன் தலைமையிலான காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4வது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அனைத்து மாநிலங்கள் வாதங்களையும் கேட்டறிந்த காவிரி மேலாண்மை ஆணையம், "காவிரியில் தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை திறந்து விட வேண்டும். நீர் வரத்து மற்றும் மழையை பொறுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்" என்று உத்தரவு பிறப்பித்தது.
ಮಂಡ್ಯದ ರೈತರಿಗೆ ಅನುಕೂಲ ಕಲ್ಪಿಸುವ ನಿಟ್ಟಿನಲ್ಲಿ ತಮಿಳುನಾಡಿಗೆ ನೀರು ಹರಿಸಿ, ನಮ್ಮ ರಾಜ್ಯಕ್ಕೂ ನೀರು ಬಿಡುವಂತೆ ಕಾವೇರಿ ನೀರು ನಿರ್ವಹಣಾ ಪ್ರಾಧಿಕಾರದ ಮನವೊಲಿಸುವಂತೆ ಅಧಿಕಾರಿಗಳಿಗೆ ಸೂಚನೆ ನೀಡಿದ್ದೇನೆ. ಪ್ರಾಧಿಕಾರವು ಸರ್ಕಾರದ ಮನವಿಗೆ ಸ್ಪಂದಿಸುವ ವಿಶ್ವಾಸ ನನಗಿದೆ.
— CM of Karnataka (@CMofKarnataka) July 9, 2019
இந்த நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று வெளியிட்ட ட்வீட்டில், "மண்டியா விவசாயிகள் பலன்பெறுவதற்காக, தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட, முடிவு செய்துள்ளோம். தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் அதிகாரிகள் ஒப்புதல் வழங்க வேண்டும். இதற்காக நமது அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளேன். கர்நாடக அரசு கோரிக்கையை, காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்கும் என நம்புகிறேன்" இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.
போதிய மழை இல்லாத நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால், மண்டியா விவசாயிகளுக்கு இதனால் பலன் கிடைக்கும் என்பதால் தண்ணீர் திறக்க வேண்டும் என்று முதல்வர் சுற்றி வளைத்து ட்வீட் செய்துள்ளதாக, கர்நாடக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.