ஜூன் 11ல் அமல்.. கர்நாடகா அரசு பஸ்களில் மகளிருக்கு இலவசம்! எந்தெந்த பேருந்துகளில் அனுமதி?இதோ விபரம்
பெங்களூர்: கர்நாடகா தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி அறிவித்த வாக்குறுதிகளில் ஒன்றான அரசு பஸ்களில் மகளிருக்கு இலவசம் என்ற திட்டம் வரும் 11ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் சித்தராமையா இன்று வெளியிட்ட நிலையில் எந்தெந்த பஸ்களில் மகளிர் இலவசமாக செல்லலாம் என்பதையும் பட்டியலிட்டுள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் கட்சி 5 திட்டங்களை அறிவித்த நிலையில் அதனை நிறைவேற்றும் பணியை தொடங்கியது. அதன்படி 5 வாக்குறுதிகளையும் நிறைவேற்ற இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

அதன்படி க்ருஹ லட்சுமி திட்டத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும். க்ருஹ ஜோதி திட்டத்தில் வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசம். அன்னபாக்யா திட்டத்தில் 10 கிலோ அரசி இலவசம். சக்தி திட்டத்தின் கீழ் கர்நாடகா அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் கொண்டு வரப்படும். யுவநிதி திட்டத்தில் டிகிரி முடித்து வேலையில்லாதவர்களுக்கு ரூ.2000, டிப்ளமோ முடித்து வேலையில்லாதவர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும் என்ற 5 அறிவிப்புகள் நடைமுறைக்கு வரும் தேதிகளை இன்று முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.
அதன்படி சக்தி திட்டத்தின் கீழ் கர்நாடகா அரசு பஸ்களில் மகளிர் இலவசமாக பயணிக்கும் திட்டம் வரும் 11ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கர்நாடகாவை சேர்ந்த பெண்கள் மட்டுமின்றி பிற மாநில பெண்களும் கர்நாடகா அரசு பஸ்களில் இலசவமாக பயணிக்க முடியும்.
இந்த இலவச பஸ் பயணம் திட்டம் என்பது கர்நாடகாவில் இயங்கும் சாதாரண மற்றும் எக்ஸ்பிரஸ் பஸ்களில் நடைமுறையில் இருக்கும். பிஎம்டிசி (பெங்களூர் மாநகர அரசு பேருந்து), கேஎஸ்ஆர்டிசி (கர்நாடகா மாநில சாலை போக்குவரத்து கழகம்) உள்ளிட்ட பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணிக்க முடியும். இருப்பினும் இந்த இலவச பஸ் சேவையை பெண்கள் கர்நாடகாவுக்குள் மட்டுமே மேற்கொள்ள முடியும்.
மாறாக கர்நாடகா அரசு பஸ்களில் வெளிமாநிலங்களுக்கு பயணித்தால் நிச்சயம் டிக்கெட் பெற வேண்டும். இதுதவிர ஏசி பஸ் மற்றும் ராஜஹம்சா மற்றும் சொகுசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க முடியாது. மேலும் பஸ்களில் ஆண்களுக்கு 50 சதவீதம் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
இதன்மூலம் மகளிருக்கான இலவச பஸ் பயண திட்டத்தால் ஏற்படும் வருமான இழப்பை குறைக்க கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளதோடு, பஸ்களில் 50:50 என்ற விகிதத்தில் ஆண் மற்றும் பெண் பயணிகள் பயணிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகா அரசின் இந்த அறிவிப்புக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.













Click it and Unblock the Notifications