கர்நாடக முதல்வர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி.. DK சிவகுமாருடன் கைகோர்த்து பேட்டி கொடுத்த சித்தராமையா!
பெங்களூர்: கர்நாடக முதல்வர் சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், முதல்வர் சித்தராமையாவும் துணை முதல்வர் சிவகுமாரும் தங்களிடையே கருத்து வேறுபாடு எதுவுமில்லை என்பதை ஒன்றாகக் கைகோர்த்தபடி வெளிப்படுத்தி உள்ளனர்.
கர்நாடக முதல்வர் மாற்றப்பட்டு, டிகே சிவகுமார் முதல்வர் ஆக இருப்பதாக தகவல்கள் பரபரத்து வரும் நிலையில், இன்று துணை முதல்வர் டிகே சிவகுமாருடன் கைகோர்த்தபடி சித்தராமையா பொது வெளியில் பேசி உள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. அடுத்த இரண்டு மாதங்களில் முதலமைச்சர் மாற்றப்படுவார் என கர்நாடக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.என். ராஜண்ணா சமீபத்தில் கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் முதலமைச்சராக பதவி ஏற்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இதை கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் மறுத்த போதிலும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, திடீரென பெங்களூரில் முகாமிட்டு இருப்பது பல்வேறு வியூகங்ளுக்கு வழிவகுத்து உள்ளது. அவர் கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகள், எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் விரைவில் கர்நாடக முதலமைச்சர் மாற்றப்படலாம் என்று தகவல் பரவி வருகிறது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயிடம் செய்தியாளர்கள் பெங்களூரில் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், இது குறித்து கட்சி மேலிடம்தான் முடிவு எடுக்கும் என்றார். கர்நாடக முதலமைச்சரை மாற்றம் செய்வது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் தான் முடிவு எடுக்கும். ஆகையால் யாரும் தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தநிலையில், மைசூர் விமான நிலையத்தில் இன்று ஒன்றாகக் கைகோர்த்தபடி பேட்டியளித்த சித்தராமையாவும் சிவகுமாரும் தங்களிடையே கருத்து வேறுபாடு எதுவுமில்லை என்பதையும் ஒற்றுமையாகச் செயல்படுகிறோம் என்பதையும் மக்களிடையே வெளிப்படுத்தியுள்ளனர்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசுகையில், "தசரா விழாவை நான் தொடங்கி வைப்பேன் என்று சொல்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? டி.கே. சிவகுமாரும் நானும் ஒன்றாக இணைந்து இருக்கிறோம். இந்த அரசு, ஐந்தாண்டுகளுக்கு பாறை போல் பலமாக நிலைபெற்றிருக்கும்.
பாஜக பொய் பிரசங்கங்களுக்கு பெயர்போன கட்சி. அவர்கள் அதையே செய்வார்கள். எங்களைப் பற்றி யார் என்ன சொன்னாலும் கவலையில்லை.
நாங்கள் ஒற்றுமையாகவே இருக்கிறோம்" என்றார். மேலும், டிகே சிவக்குமாருடன் கைகோர்த்து உயர்த்திக் காட்டினார். சித்தராமையாவின் கருத்தை ஆமோதிக்கும் வகையில், டி.கே.சிவகுமாரும் புன்னகைத்தார்.
சுர்ஜேவாலா, கர்நாடக எம்.எல்.ஏக்களை சந்திப்பது குறித்துப் பேசிய சித்தராமையா, "அவர் கர்நாடகப் பொறுப்பாளர் மற்றும் பொதுச் செயலாளர். அவர் எங்கள் எம்எல்ஏக்களிடமிருந்து கருத்துகளைப் பெற்று, அவர்களுக்கு ஏதேனும் குறைகள் உள்ளதா என்று ஆலோசனை நடத்துகிறார். இது அவருடைய வேலை" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications