போலீஸ் அதிகாரியை அடிக்க பாய்ந்த சித்தராமையா.. பொதுக்கூட்ட மேடையில் பரபரப்பு சம்பவம்.. ஏன்?
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்ட மேடையில் முதல்வர் சித்தராமையா பேசி கொண்டிருந்தார். அப்போது எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் சித்தராமையாவுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் கோபமான சித்தராமையா போலீஸ் அதிகாரியை மேடைக்கு அழைத்து அடிக்க பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். தற்போது அவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் பற்றி அவர் கருத்து தெரிவித்தார்.

இந்த தாக்குதல் உளவுத்துறை தோல்வியால் தான் நடந்தது. பாகிஸ்தான் மீது போர் தொடுக்க கூடாது என்று கூறினார். சித்தராமையாவின் இந்த கருத்து சர்ச்சையானது.
இதையடுத்து தற்போது சித்தராமையா மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். அதாவது காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் பெலகாவியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் என்று சில விஷயங்களை சித்தராமையா பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது கூட்டத்தில் இருந்தவர்களில் சிலர் சித்தராமையாவுக்கு கருப்பு கொடி காண்பித்தனர். மேலும் சித்தராமையாவுக்கு எதிராக கோஷமிட்டனர். விசாரணையில் பாஜகவை சேர்ந்த அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு காங்கிரஸ் பொதுக்கூட்டத்துக்குள் நுழைந்து சித்தராமையாவுக்கு கருப்பு கொடி காட்டி அவருக்கு எதிராக கோஷமிட்டதும் தெரியவந்தது.
போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதனால் மேடையில் பேசிக்கொண்டிருந்த சித்தராமையா டென்ஷன் ஆனார். அவரை காங்கிரஸ் கட்சியின் பிற தலைவர்கள் சமாதானம் செய்தனர். இருப்பினும் அவர் ‛கூல்'ஆகவில்லை. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற சித்தராமையா அங்கு பாதுகாப்பு பணிக்காக நின்ற போலீஸ் அதிகாரியை அழைத்து அடிக்க கை ஓங்கினார்.
அதிர்ஷ்டவசமாக அவர் அடிக்கவில்லை. மாறாக போலீஸ் அதிகாரியை திட்டி அனுப்பினார். இதற்கிடையே கூட்டத்தில் கோஷமிட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இருப்பினும் போலீஸ் அதிகாரியை சித்தராமையா அடிக்க பாய்ந்தது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
இதனை பார்க்கும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதோடு சித்தராமையாவின் செயலை கடுமையாக கண்டித்து வருகின்றனர். இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் பிஒய் விஜயேந்திரா தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ஏ இங்கே வா.. யார் இங்கே எஸ்பி? நீங்க என்ன பண்றீங்க? என்று சித்தராமையா கேள்வி கேட்கிறார். கூடுதல் எஸ்பியை அழைத்து அடிக்கும் வகையில் சைகை செய்தார். சீனியர் போலீஸ் அதிகாரி மீது சித்தராமையா கோபப்படுவது ஒன்றும் புதிது அல்ல. இது கண்டிக்கத்தக்கது'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications