26-ல் எம்.எல்.ஏ.க்கள் மீட்டிங்.. 25-ல் அதிகாரிகளுக்கு எடியூரப்பா விருந்து.. அப்ப அது கன்பார்ம் தானா?
பெங்களூரு: கர்நாடகாவில் பா.ஜ.க முதல்வர் எடியூரப்பா பதவி விலகக்கோரி உட்கட்சியினரே தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா ஆட்சி நிர்வாகத்தில் தலையிட்டு வருகிறார் என்பதே அவர்களது குற்றச்சாட்டாக இருக்கிறது.
Recommended Video
மேலும் பாஜக சீனியர் அமைச்சர்கள், சீனியார் எம்.எல்.ஏ.க்கள் எடியூரப்பா மீதான புகார்களை டெல்லி பாஜக தலைமைக்கு வரிசையாக அனுப்பினார்கள். இதனால் ஒரு கட்டத்தில் டெல்லி தலைமையே எடியூரப்பா மீது அதிருப்தி கொண்டது.

அடுத்தடுத்து சந்திப்பு
இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில் டெல்லி சென்ற முதல்வர் எடியூரப்பா பிரதமர் நரேந்திர மோடியிடம் உட்கட்சி விவகாரத்தை எடுத்துரைத்தார். மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரையும் சந்தித்த எடியூரப்பா தனது மனக்குமுறல்களை கொட்டினார். அதே வேளையில் உடல்நிலையை காரணம் காட்டி தான் பதவி விலகிக் கொள்வதாக மோடியிடம் எடியூரப்பா கூறி விட்டதாவும், ஆனால் தனது மகனுக்கு கர்நாடகா பா.ஜ.க.வில் நல்ல பதவி கொடுக்க வேண்டும் என்று அவர் பிரதமரிடம் கூறியதாகவும் தகவல்கள் பறந்து வந்தன.

சமாளித்த எடியூரப்பா
ஆனால் ''2024-ம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெறும் தேர்தல் குறித்தே விவாதித்தோம். நீங்க நினைக்கிற மாதிரி ஏதும் இல்லை'' என்று நிருபர்களிடம் சமாளித்தார் எடியூரப்பா. ஆட்சியில் அமர்ந்து 2 வருடம் ஆன நிலையில் வருகிற 26-ம் தேதி பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. தனது மீதான அதிருப்தியை அறிந்து கொள்ளவும், தனது மனதில் உள்ளதை உறுப்பினர்களிடம் வெளிப்படையாக பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிகாரிகளுக்கு விருந்து
அதே நேரத்தில் இந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு ஒரு நாள் முன்னதாக அதாவது ஜூலை 25-ம் தேதி மூத்த அதிகாரிகள் மற்றும் அவரது செயலக ஊழியர்களுக்கு மதிய உணவு விருந்து வழங்க முதல்வர் எடியூரப்பா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரங்களில் மேலும் யூகங்களைத் தூண்டியுள்ளது. அதாவது 26-ம் தேதி நடக்கும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பதிவு விலகும் அறிவிப்பை முதல்வர் எடியூரப்பா வெளியிட உள்ளார். இதனால் தான் அவர் ஒருநாள் முன்னதாக விருந்து வைக்கிறார் என்று பல்வேறு தகவல்கள் ஜெட் வேகத்தில் உலா வருகின்றன.

பரபரப்பு காத்திருக்கு
ஆனால் எடியூரப்பாவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் இதனை நிராகரித்துள்ளனர். முதல்-அமைச்சர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்குப் பிறகு பா.ஜ.க எம்.எல்.ஏக்களுக்கு மதிய விருந்தை ஏற்பாடு செய்யும்படி எடியூரப்பா கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து விதான சவுதாவில் புகைப்பட நிகழ்வும் நடத்த விரும்புகிறார். அதற்கு சில நாட்களுக்கு முன்னர், ஜூலை 23 அல்லது 24 ஆம் தேதிகளில், எடியூரப்பா தனது சொந்த மாவட்டமான சிவமோகாவுக்குச் சென்று திட்டங்களைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறதும் என்றும் அந்த அதிகாரி கூறினார். ஆக மொத்தம் 26-ம் தேதி கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு சுழல போகிறது.பொறுத்திருந்து பார்ப்போம்












Click it and Unblock the Notifications