கர்நாடகாவுக்கு 1400 டன் ஆக்சிஜன் அனுப்புங்க... மத்திய அரசுக்கு எடியூரப்பா கோரிக்கை
பெங்களூரு: கர்நாடகாவுக்கு 1400 டன் ஆக்சிஜன் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அம்மாநில முதல்வர் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று. மகாராஷ்டிரா, கேரளாவை தொடர்ந்து கர்நாடகா, கொரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் உள்ளது.
கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 26,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் 190 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவும் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

மோடி ஆலோசனை
இந்த நிலையில் பிரதமர் மோடி, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 10 மாநிலங்களின் முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது எடியூரப்பா பேசியதாவது:

மருத்துவமனைகளில் பற்றாக்குறை
ஆக்சிஜன் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் மருந்துகள் பற்றாக்குறையால் மருத்துவமனைகள் மூடப்படும் அபாயம் உள்ளது. அடுத்த 10 நாட்களுக்குள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும். மேலும் கர்நாடகாவுக்கு நாள்தோறும் 1471 டன் ஆக்சிஜன் வழங்க வேண்டும்; அதேபோல் 2 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளை உடனே வழங்க வேண்டும்.

ஆக்சிஜன் தேவை
கடந்த வியாழக்கிழமையன்று மாநில அரசு 500 டன் ஆக்சிஜனை பயன்படுத்தியது. இதில் மத்திய அரசு கொடுத்தது வெறும் 300 டன் ஆக்சிஜன் தான். ஏப்ரல் 25-ந் தேதி முதல் கர்நாடகாவுக்கு 1142 டன் ஆக்சிஜன் தேவை. அதேநேரத்தில் ஏப்ரல் 30-ந் தேதி முதல் 1471 டன் ஆக்சிஜன் தேவைப்படும். ஆக்சிஜன் விநியோகிக்கப்படாமல் இருந்தால் மருத்துவமனைகளை மூடத்தான் வேண்டியது இருக்கும்.

ரெம்டெசிவிர் தேவை
பெங்களூரு, தும்கூரு, பல்லாரி, மைசூரு, ஹாசன் ஆகிய மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்துகளின் தேவை அதிகமாக இருக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் 50% படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 82 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மே 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.












Click it and Unblock the Notifications