கர்நாடகா காங்கிரஸ் ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும்..திடுதிப்பென 'சங்கு ஊதும்' பாஜக கூட்டணி குமாரசாமி
பெங்களூர்: கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும்; மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்டது போல திடீர் அரசியல் திருப்பங்கள் கர்நாடகாவிலும் நிகழப் போகிறது என பாஜகவின் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி திடீரென தெரிவித்திருப்பது அம்மாநிலத்தில் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களைக் கைப்பற்றியது. பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை விட கூடுதலான தொகுதிகளில் வென்றது காங்கிரஸ். பாஜகவுக்கு 66 இடங்களும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 19 இடங்களும்தான் கிடைத்தன.

என்னதான் காங்கிரஸ் கட்சியை பாஜக உடைத்தாலும் அதிகபட்சம் 20 எம்.எல்.ஏக்கள் கட்சி தாவினாலும் கூட காங்கிரஸ் அரசு தப்பித்துவிடும் என்பது அக்கட்சியினர் திடமான நம்பிக்கை. ஆனால் கர்நாடகா சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த குமாரசாமி, இடைவிடாமல் காங்கிரஸ் ஆட்சி கவிழப் போகிறது என கூறி வந்தார். அண்மையில் திடீரென இந்த பல்லவியைப் பாடுவதை நிறுத்தி இருந்தார்.
தற்போது மீண்டும் கச்சேரியை கூட்டியிருக்கிறார் குமாரசாமி. பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி கூறியதாவது: காங்கிரஸ் ஆட்சியில் எதுவுமே நன்றாக இல்லை. சித்தராமையா தலைமையிலான அரசு எப்போது கவிழும் என்பது எனக்கு தெரியவில்லை. கர்நாடகா காங்கிரஸ் அரசில் உள்ள மிக முக்கியமான அமைச்சர் ஒருவர் (டிகே சிவகுமார்) தம் மீதான வழக்குகளில் இருந்து தப்பித்தால் போதும் என நினைக்கிறார். மத்திய அரசு அந்த அமைச்சர் மீது போட்ட வழக்குகளில் இருந்து அவரால் தப்பிக்கவே முடியாது.
மகாராஷ்டிராவில் (சிவசேனா கட்சி உடைக்கப்பட்டு காங்கிரஸ்-என்சிபி-சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது) எப்படி அரசியல் மாற்றம் நிகழ்ந்ததோ அதேபோல கர்நாடகாவிலும் நடக்கப் போகிறது. இந்த அரசியல் தலைகீழ் மாற்றமும் ஆட்சி கவிழ்வதும் கர்நாடகவில் எந்த நேரத்திலும் நடக்கலாம். அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் தத்துவம், சித்தாந்தம் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. தற்போதைய சூழ்நிலைகள் அரசியல் சூழ்நிலைகளை புரட்டிப் போடப் போகின்றன. இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications