மத்திய பாஜக அரசுக்கு எதிராக முதல்வர் சித்தராமையா தலைமையில் "சொம்பு" போராட்டம் நடத்திய கர்நாடகா அரசு!
பெங்களூர்: மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக முதல்வர் சித்தராமையா தலைமையில் கர்நாடகா அமைச்சர்கள் 'சொம்பு' போராட்டத்தை இன்று நடத்தினர்.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவியது. இதனால் மாநிலத்தின் 236 தாலுகாக்களில் 223ஐ வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்தது கர்நாடகா காங்கிரஸ் அரசு.

அத்துடன் கர்நாடகா மாநில அரசுக்கு வறட்சி பாதிப்புக்கான ரூ18,171 கோடி நிதியை வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசிடம் கர்நாடகா அரசு கோரிக்கை விடுத்து வந்தது. இது தொடர்பாக நீதிமன்ற படிக்கட்டுகளிலேயும் கர்நாடகா அரசு ஏறியது.
இந்த நிலையில் வெறும் ரூ3,454 கோடியை வறட்சி நிவாரண நிதியாக மத்திய அரசு, கர்நாடகாவுக்கு கொடுத்தது. இதற்கு கர்நாடகா அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த பாரபட்சமான போக்கைக் கண்டித்து கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலைமையில் அம்மாநில அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இன்று சட்டசபைக்கு வெளியே போராட்டம் நடத்தினர். அப்போது கைகளில் சொம்பை ஏந்தி அவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இப்போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரான அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலாவும் பங்கேற்றார்.












Click it and Unblock the Notifications