2,000 ஏக்கர் ஓசூர் ஏர்போர்ட்- போட்டியாக 26 கிமீ-ல் 5,000 ஏக்கர் விமான நிலையம் உருவாக்கும் கர்நாடகா?
பெங்களூர்: காவிரி நதிநீர் பிரச்சனையில்தான் தமிழ்நாட்டுடன் கர்நாடகா மல்லுக்கட்டி வருகிறது. தற்போது தமிழ்நாட்டின் பிரம்மாண்டமான ஓசூர் 2,000 ஏக்கர் விமான நிலையத் திட்டத்திலும் கர்நாடகா போட்டியை வெளிப்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் ஓசூர் விமான நிலைய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே ஓசூரில் இருந்து 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜிகானி (ஜிகினி) உட்பட 6 இடங்களில் ஏதேனும் ஒன்றில் 5,000 ஏக்கரில் புதிய விமான நிலையம் கட்டுவோம் என அறிவித்துள்ளது கர்நாடகா அரசு.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் இறுதியில் வெளியிட்ட ஓசூர் விமான நிலைய திட்ட அறிவிப்பு தமிழ்நாடு, கர்நாடகா இரு மாநிலங்களிலும் பேசு பொருளானது. அதாவது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், 2000 ஏக்கரில் புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் பயனுறும் வகையில் ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

என்ன சர்ச்சை?: ஓசூருக்கு மிக அருகில்தான் பெங்களூர் மாநகரம் உள்ளதால் இந்த திட்டம் பெரும் வரவேற்புக்குரியதாக இருந்தது. அதே நேரத்தில் சில விதிகளை சுட்டிக்காட்டி உதாரணமாக 150 கிமீ தொலைவுக்குள் சர்வதேச விமான நிலையங்கள் அமைக்கப்படக் கூடாது என்பதால் பெங்களூர் அருகே ஓசூரில் விமான நிலையம் சாத்தியமே இல்லை எனவும் கூறப்பட்டது. ஆனால் சில விதிவிலக்குகள் இருப்பதால் ஓசூரில் விமான நிலையம் சாத்தியம் என்றது அரசு தரப்பு.
பெங்களூர் கெம்பே கவுடா ஏர்போர்ட்: இந்த நிலையில் கர்நாடகா மாநில தொழில்துறை அமைச்சர் எம்பி பாட்டீல் நேற்று பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பெங்களூர் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் உலகின் 3-வது பெரிய விமான நிலையம். கடந்த ஆண்டு 3.7 கோடி பயணிகள் வந்து சென்றனர். இந்த எண்ணிக்கை 5 கோடியாகவும் உயரும். இந்த விமான நிலையத்தில் மிக அதிகபட்சம் 11 கோடி பயணிகளை கையாளலாம்.
150 கிலோ மீட்டர் விதி சிக்கல் இல்லை: பொதுவாக 150 கிலோ மீட்டர் தொலைவுக்குள் புதிய விமான நிலையம் அமைக்க முடியாது. ஆனால் மும்பை, டெல்லியில் இத்தகைய நிபந்தனைகள் இல்லை. ஆகையால் 2-வது விமான நிலையத்தை அமைக்கும் பணியை கர்நாடகா அரசு தொடங்க இருக்கிறது.
6 இடங்களை ஆய்வு செய்யும் கர்நாடகா: கர்நாடகாவின் புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்க 5 முதல் 6 இடங்களைத் தேர்வு செய்துள்ளோம். மைசூரு ரோடு, மாகடி, தாபஸ்பேட்டை, ஜிகினி, தும்கூரு, கனகபுரா ஆகிய 6 இடங்களை ஆய்வு செய்கிறோம். இதில் சரியான இடத்தை தேர்வு செய்வோம் என்றார்.
ஓசூருக்கு நெருக்கடி தரும் கர்நாடகா: கர்நாடகா அமைச்சர் பாட்டீல் குறிப்பிட்ட மைசூரு ரோடு, மாகடி, தாபஸ்பேட்டை, ஜிகினி, தும்கூரு, கனகபுரா ஆகிய 6 இடங்களில் ஜிகானி எனப்படும் ஜிகினியில் இந்த புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைந்தால் அது தமிழ்நாடு அரசின் திட்டத்துக்கு மிகப் பெரும் நெருக்கடியாக இருக்கும். ஏனெனில் ஜிகினி என்பது ஓசூரில் இருந்து வெறும் 26 கிலோ மீட்டர் தொலைவில்தான் உள்ளது. இதர இடங்கள் ஓசூருக்கு தொலைவில் இருப்பதால் சிக்கல் இல்லை. கர்நாடகா அமைச்சர் 6 இடங்கள் என குறிப்பிட்டாலும் பெங்களூர் விமான நிலையத்துக்கு போட்டியாகவே ஓசூர் விமான நிலையம் இருக்கும் என்பதால் ஜிகினியில் விமான நிலையம் அமைக்கத்தான் முயற்சிக்கும்; இது தமிழ்நாட்டுக்கு சிக்கல்தான் என்கின்றனர் கர்நாடகா மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications