பெங்களூர் சிறையில் சொகுசு வாழ்க்கை வழக்கு- சசிகலா, இளவரசியை கைது செய்ய பிடிவாரண்ட்- கோர்ட் அதிரடி!
பெங்களூர்: பெங்களூர் சிறையில் சொகுசு வசதிகளை சட்டவிரோதமாக பெற்றது தொடர்பான வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சிறைத் துறை அதிகாரிகளுக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றம் அதிரடியாக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி இருவரும் பெங்களூர் சிறையில் 4 ஆண்டு தண்டனை அனுபவித்தனர். ஆனால் பெங்களூர் சிறையில் சட்டவிரோதமாக பல்வேறு சொகுசு வசதிகளை இருவரும் அனுபவித்தனர்.

பெங்களூர் சிறையில் அதிகாரிகளுக்கு ரூ2 கோடி லஞ்சம் கொடுத்து வெளியே சசிகலா, இளவரசி ஷாப்பிங் சென்ற வீடியோக்களும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. தமிழ்நாடு, கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூர் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆனால் பெங்களூர் லோக் ஆயுக்தா நீதிமன்ற விசாரணைக்கு சசிகலா, இளவரசி ஆஜராகவில்லை. இவ்வழக்கில் சசிகலா தரப்பு முதல் வாய்தாவுக்கு மட்டும் ஆஜராகி இருந்தது. எஞ்சிய எந்த ஒரு விசாரணைக்கும் சசிகலாவும் இளவரசியும் ஆஜராகவில்லை. இதனையடுத்து பெங்களூர் லோக் ஆயுக்தா நீதிமன்றம் சசிகலா, இளவரசி இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கில் சசிகலா, இளவரசிக்கு ஜாமீன் வழங்க கையெழுத்திட்ட நபர்களுக்கும் லோக் ஆயுக்தா நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இவ்வழக்கின் விசாரணை அக்டோபர் 5-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications