கர்நாடகா.. இந்த ஆண்டிலேயே இல்லாத அளவு.. ஒரே நாளில் "4 டிஜிட்டை" தாண்டிய கொரோனா கேஸ்.. பெங்களூர் டாப்
பெங்களூர்: கர்நாடகாவில்.. அதிலும் தலைநகர் பெங்களூரில்.. கொரோனா நோய் தோற்று எண்ணிக்கை பழையபடி வேகமாக அதிகரித்து வருகிறது.
டிசம்பர் 25 ஆம் தேதிக்கு பிறகு.. அதாவது இந்த ஆண்டில் முதல் முறையாக.. நேற்று கர்நாடகாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 டிஜிட்டை எட்டியுள்ளது. ஆம்.. 24 மணி நேரத்தில் கர்நாடகம் முழுவதும் 1,135 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் பெங்களூர் பங்களிப்பு மிக மிக அதிகமாக இருக்கிறது. கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி கேஸ்கள் வருவதற்கு பதிவாகியுள்ளன.

தென் இந்தியாவிலேயே அதிகம்
மொத்தம் 628 கொரோனா கேஸ்கள் பெங்களூரில் பதிவாகியுள்ளன. தென் இந்தியாவிலேயே அதிகமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நகரம் பெங்களூர். இதற்கு அடுத்தபடியாக சென்னையில் 24 மணி நேரத்தில் 294 கேஸ்கள் பதிவாகியுள்ளன. கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோடு நகரில் 288 கேஸ்கள் பதிவாகின்றன. ஹைதராபாத் மாநகராட்சியில் 35 கேஸ்கள் பதிவாகியுள்ளன.

புறநகர் பகுதிகள்
பெங்களூரின் புறநகர் பகுதிகளில் அதிகமாக பாதிப்பு பதிவு செய்யப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா டிரேசிங் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளில் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் தோல்வியடைந்துள்ளதுதான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

7 நாட்களாக மந்தம்
கடந்த 7 நாட்களில் வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்போரை உறுதி செய்யும் ஆய்வுகள் வெறும் 53 சதவீதம் மட்டும்தான் நடந்துள்ளன, நோயாளிகள் யாரையெல்லாம் தொடர்பு கொண்டார்களா அவர்களை கண்டறியும் பணிகளிலும் சுணக்கம் ஏற்பட்டு உள்ளது. 53 சதவீதம் மட்டும்தான் இவ்வாறு காண்டாக்ட் டிரேஸ் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி தொற்று நோய் நிபுணர் மருத்துவர் கிரிதர் பாபு கூறுகையில், மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறையில் போதிய அளவுக்கு ஊழியர்களில் இல்லாததுதான் இந்த நிலைமைக்கு காரணம். பெரும்பாலான ஊழியர்கள் தற்போது தடுப்பூசி போடும் பணிகளில் பிசியாக இருக்கிறார்கள். எனவே அனைத்து துறைகளிலும் உள்ள கூடுதல் அதிகாரிகளை இதுபோன்ற பணிகளுக்கு பயன்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஊழியர் மெத்தனம்
மாநகராட்சியில் உள்ள ஒரு அதிகாரி கூறுகையில், நோயாளிகளை தொடர்பு கொண்டவர்களின் பட்டியலை மத்திய டேட்டாபேஸ் தளத்தில் ஊழியர்கள் பதிவு செய்யாமல் தவிர்த்து வருகின்றனர். எனவே நோயாளிகள் குறித்த சரியான தகவல்கள், விழிப்புணர்வு போன்றவை இல்லாமல் போய்விட்டது என்று தெரிவித்தார்.

தனிமைப்படுத்துதல்
மேலும் ஒரு குடும்பத்தில் யாருக்காவது நோய்த் தொற்று ஏற்பட்டால் அவர்கள் முன்பு போல தற்போது தனிமைப் படுத்திக் கொள்வது கிடையாது இதன் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கும் நோய் பரவல் வேகமாக இருக்கிறது. இதுவரை பதிவாகி உள்ள கேஸ் வரலாறுகளை வைத்து பார்க்கும்போது சமீபகாலமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து நோய்தொற்று பரவியுள்ளது தெரிகிறது.

மந்தை எதிர்ப்பு சக்தி
அதேநேரம் கொரோனா நோய் தொற்று இந்தியாவில் கால் பதித்து ஓராண்டு தாண்டிவிட்ட நிலையில் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி மக்களிடையே பெருகி இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மறுபடியும் இரண்டாவது அலை வீசுவது போல கேஸ் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது மந்தை நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மக்கள் முன்னெச்சரிக்கை
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் முன்னாள் பேராசிரியர் மற்றும் வைராலஜி துறை நிபுணர் டாக்டர் ஜேக்கப் கூறுகையில், கர்நாடகாவில் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி வரவில்லை, இப்போதைக்கு வருவதற்கான வாய்ப்பு கிடையாது என்று தெரிவித்துள்ளார். எனவே மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்ப்பது, அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவுவது, சமூக இடைவெளியை பராமரிப்பது, முகக் கவசங்களை கட்டாயம் அணிவது, உடனடியாக பரிசோதனைகள் நடத்துவது போன்றவைதான் இந்த நோய்களை கட்டுபடுத்த உதவும் என்கிறார்கள் அதிகாரிகள்.

ஒரு லட்சம் பரிசோதனைகள்
பெங்களூரில் தினமும் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்தியபோது அதில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் எடியூரப்பா, கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications