'இந்தி பெல்ட்’தான் இந்தியாவா? தென்னிந்தியா புறக்கணிப்பு.. தனிநாடு கோரிக்கை குறித்து டிகே சிவகுமார்
பெங்களூர்: இந்தியா என்பது ஒரு நாடு; இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமே இந்தியா அல்ல; மத்திய பட்ஜெட்டில் தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதன் வலியைத்தான் தனிநாடு கோருவோம் என டிகே சுரேஷ் எம்பி பேசினார் என கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த கர்நாடகா காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷ், மத்திய அரசால் தென்னிந்திய மாநிலங்கள் வஞ்சிக்கப்படும் சூழ்நிலை நீடித்தால் அத்தனை தென்னிந்திய மாநிலங்களும் ஒருங்கிணைந்து இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து தனிநாடு கோரும் நிலைமை உருவாகும். எங்களிடம் வரி வசூல் செய்கிறது மத்திய அரசு. அப்படியானால் எங்களுக்கான உரிய பங்கைத்தான் தர வேண்டும். ஆனால் தென்னிந்திய மாநிலங்களுக்கு மத்திய பாஜக அரசு அநீதி இழைத்து வருகிறது. ஒவ்வொரு விவகாரத்திலும் தென்னிந்தியாவுக்கு அநீதிதான் மத்திய அரசு இழைத்து கொண்டே இருக்கிறது. கர்நாடகா மாநிலமானது ரூ4 லட்சம் கோடிக்கும் அதிகமான வரி வசூல் செய்து மத்திய அரசுக்கு கொடுக்கிறது. ஆனால் மத்திய அரசு எங்களுக்கு எவ்வளவு திருப்பித் தருகிறது? நாட்டின் 16-வது நிதிக் குழு இது குறித்து கவனம் செலுத்தாமல் போனால் தென்னிந்திய மக்கள் தங்களது உரிமைக் குரலை எழுப்பவே செய்வார்கள் என கூறியிருந்தார்.

டிகே சுரேஷ் எம்பியின் இந்த கருத்துக்கு கர்நாடகா பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். டிகே சுரேஷ் எம்பியின் இந்த கருத்து தேசதுரோக செயல் என பாஜக தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
#WATCH | Bengaluru: On Congress MP DK Suresh's statement, Karnataka Deputy CM DK Shivakumar says, "DK Suresh or any other leader have spoken of the pain of South India... There has to be a balance. The entire country is one... You cannot only look at the Hindi belt... In this… https://t.co/p7tv8NZhLz pic.twitter.com/6OcnVQ5IrC
— ANI (@ANI) February 1, 2024
பட்ஜெட் வஞ்சகம்:தென்னிந்தியா ’தனிநாடு’ கோரும் நிலைமை ஏற்படும்- கர்நாடகா காங். எம்பி பகீர் குரல்!
இது தொடர்பாக டிகே சுரேஷின் சகோதரரும் கர்நாடகா துணை முதல்வருமான டிகே சிவகுமார் கூறியதாவது: தென்னிந்திய மக்களின் வலியையும் வேதனையையும்தான் டிகே சுரேஷ் உள்ளிட்ட தலைவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நாடு ஒரே தேசம்தான். ஆனால் நீங்கள் இந்தி பெல்ட் மாநிலங்களைத் தாண்டி பார்ப்பதே இல்லையே. மத்திய அரசின் பட்ஜெட்டில் சமமான நிதிப் பகிர்வு இல்லையே. மத்திய அரசுக்கு கர்நாடகா பெருமளவு வரி வருவாய் வசூலித்து வருகிறது. ஆனால் தென்னிந்திய மாநிலங்களுக்கு என முக்கியமான அறிவிப்புகள் எதுவுமே இந்த பட்ஜெட்டில் இடம் பெறவே இல்லையே. தென்னிந்திய மக்கள் புறக்கணிக்கப்படுவதாகவே கருதுகின்றனர். நாங்கள் இந்தியர்கள். இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும். பிராந்திய அடிப்படையிலான தனிநாடு கோரிக்கை பேச்சுகளுக்கே இடமில்லை. இவ்வாறு டிகே சிவகுமார் கூறினார்.












Click it and Unblock the Notifications