பட்ஜெட் வஞ்சகம்:தென்னிந்தியா ’தனிநாடு’ கோரும் நிலைமை ஏற்படும்- கர்நாடகா காங். எம்பி பகீர் குரல்!
பெங்களூர்: தென்னிந்திய மாநிலங்களை மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் புறக்கணித்திருப்பதால் தென்னிந்திய மாநிலங்கள் இணைந்து தனிநாடு கோரும் நிலைமை உருவாகும் என கர்நாடகா மாநில காங்கிரஸ் எம்பி டி.கே.சுரேஷ் எச்சரித்திருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
17-வது லோக்சபாவின் இறுதி கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நேற்று லோக்சபாவில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. கர்நாடகா மாநில காங்கிரஸ் எம்.பி. டிகே சுரேஷ் இது தொடர்பாக கூறியதாவது; தென்னிந்திய மாநிலங்கள் மூலமான வரி வருவாயை மத்திய பாஜக அரசு வட இந்திய மாநிலங்களுக்கு குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களுக்குதான் அள்ளி கொடுக்கிறது. இந்த நிலைமை நீடிக்கக் கூடாது.
மத்திய அரசால் தென்னிந்திய மாநிலங்கள் வஞ்சிக்கப்படும் சூழ்நிலை நீடித்தால் அத்தனை தென்னிந்திய மாநிலங்களும் ஒருங்கிணைந்து இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து தனிநாடு கோரும் நிலைமை உருவாகும். எங்களிடம் வரி வசூல் செய்கிறது மத்திய அரசு. அப்படியானால் எங்களுக்கான உரிய பங்கைத்தான் தர வேண்டும். ஆனால் தென்னிந்திய மாநிலங்களுக்கு மத்திய பாஜக அரசு அநீதி இழைத்து வருகிறது. ஒவ்வொரு விவகாரத்திலும் தென்னிந்தியாவுக்கு அநீதிதான் மத்திய அரசு இழைத்து கொண்டே இருக்கிறது,
கர்நாடகா மாநிலமானது ரூ4 லட்சம் கோடிக்கும் அதிகமான வரி வசூல் செய்து மத்திய அரசுக்கு கொடுக்கிறது. ஆனால் மத்திய அரசு எங்களுக்கு எவ்வளவு திருப்பித் தருகிறது? நாட்டின் 16-வது நிதிக் குழு இது குறித்து கவனம் செலுத்தாமல் போனால் தென்னிந்திய மக்கள் தங்களது உரிமைக் குரலை எழுப்பவே செய்வார்கள். இவ்வாறு டிகே சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் வஞ்சகம்: தென்னிந்திய மாநிலங்கள் தனிநாடு கோருமா? தேசதுரோக செயல்- வரிந்து கட்டி பாயும் பாஜக!
கர்நாடகா காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷின் இந்த கருத்து பாஜகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. கர்நாடகா பாஜக தலைவர்கள் டிகே சுரேஷின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளனர். கர்நாடகா மாநில துணை முதல்வர் டிகே சிவகுமாரின் சகோதரர்தான் டிகே சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications