‛போச்சே’.. கர்நாடகாவில் ‛கார்கே’ கோட்டையில் காலியாகும் பாஜக! மோடி, அமித்ஷாவுக்கு ஷாக்..பரபர சர்வே
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவின் கோட்டையில் ‛கை' சின்னம் ‛ஸ்வீப்' செய்யும் என புதிய கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. இங்கு பாஜகவை வெற்றி பெற செய்ய பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இது அதிர்ச்சியான செய்தியாகும்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க பாஜக முயன்று வருகிறது. அதேபோல் பாஜகவை வீழ்த்தி இழந்த ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக கர்நாடகா என்பது காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவின் சொந்த மாநிலம். இவர் கர்நாடகா மாநிலத்தின் கலபுரகி மாவட்டத்தை சேர்ந்தவராவார். இதனால் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைக்க வேண்டிய பொறுப்பு மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அதிகமாக உள்ளது.
இந்த மண்டலத்தில் பீதர், யாதகிரி, கொப்பல், கலபுரகி, ராய்ச்சூர் உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளன. மொத்தம் 31 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதனால் தான் மல்லிகார்ஜூன கார்கே தொடர்ந்து கர்நாடகாவில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். குறிப்பாக ஹைதரபாத்-கர்நாடகா மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் மல்லிகார்ஜூன கார்கே முகாமிட்டு தினமும் பல்வேறு பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்நிலையில் தான் ஹைதராபாத் கர்நாடகா மண்டலத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற பாஜக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டர்கள் ஹைதராபாத்-கர்நாடகா மண்டலத்தில் பிரசாரங்களை செய்து வருகின்றனர். இதனால் இந்த மண்டலத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளில் யாருக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதற்கிடையே தான் தற்போது C Daily Tracker சார்பில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த கருத்து கணிப்பின்படி ஹைதரபாத் கர்நாடகா மண்டலத்தில் காங்கிரஸ் கட்சி ‛ஸ்வீப்' செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த மண்டலத்தில் மொத்தம் 31 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி 27 முதல் 29 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என அந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஹைதராபாத் கர்நாடகா மண்டலத்தில் காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக பாஜக 1 முதல் 3 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் கட்சி 1 முதல் 2 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாஜகவுக்கு பெரிய அடியாகும். ஏனென்றால் கடந்த 2018 சட்டசபை தேர்தலில் இந்த மண்டலத்தில் பாஜக 12 இடங்களிலு, காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும், ஜேடிஎஸ் கட்சி 4 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் இந்த கருத்து கணிப்பு மல்லிகார்ஜூன கார்கே மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு உத்வேகம் அளித்துள்ளது. மாறாக பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும் தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் உள்ளன. கடைசி கட்ட பிரசாரம் என்பது தேர்தலின் முடிவுகளை பல மாநிலங்களில் மாற்றி உள்ளன. இதனால் நிச்சயம் பிரதமர் நரேந்திர மோடி, ஜேபி நட்டா, அமித்ஷா ஆகியோரின் பிரசாரம் என்பது இந்த மண்டலத்தில் பாஜகவுக்கு கைக்கொடுக்கும் என பாஜகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications