நெருங்கும் தேர்தல்.. பாஜக எம்எல்ஏ அலுவலகம் அனுப்பும் மெசேஜால் மக்கள் ஷாக்!பெங்களூரில் என்ன நடக்குது?
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நெருங்கும் நிலையில் பெங்களூரில் சிட்டிங் பாஜக எம்எல்ஏவும், அமைச்சராக இருப்பவரின் அலுவலகத்தில் இருந்து பொதுமக்களின் செல்போன் எண்களுக்கு அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை விபரங்களுடன் மெசேஜ்கள் அனுப்பப்படும் சம்பவம் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். அதேபோல் பாஜக, காங்கிரஸ் மேலிட தலைவர்களும் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கர்நாடகாவில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் பெங்களூரில் மல்லேஸ்வர் தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் பாஜக எம்எல்ஏவாக அஸ்வத் நாராயணன் உள்ளார். இவர் முதல்வர் பசவராஜ் பொம்மை அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் அஸ்வத் நாராயணன் மல்லேஸ்வரம் தொகுதியில் களமிறங்கி உள்ளார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அனுப் ஐயங்கார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் பெங்களூர் மல்லேஸ்வரம் எம்எல்ஏ (அஸ்வத்நாராயணன்) அலுவலகத்தில் இருந்து வாக்காளர் அடையாள அட்டையின் விபரங்களுடன் மக்களுக்கு மெசேஜ்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
பொதுவாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்காளர்களின் பெயர் பட்டியல் மட்டுமே வழங்கப்படும். வாக்காளர்களின் செல்போன் எண் உள்ளிட்ட விபரங்கள் எதுவும் வழங்கப்படாது. ஆனால் பாஜக எம்எல்ஏவின் அலுவலகத்தில் இருந்து வாக்காளர்களின் செல்போன்களுக்கு மெசேஜ் செல்கிறது. அதில் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயர், வரிசை எண், பூத் முகவரி உள்ளிட்ட பல விபரங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.
அதாவது எப்படி அவர்களுக்கு செல்போன் எண்கள் கிடைத்தன? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இதுதொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அஸ்வத் நாராயணன் வாக்காளர்களின் செல்போன் எண்களை பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுபற்றி வேணு மாதவ் என்பவர், ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், ‛‛எனது வாக்காளர் அடையாள விபரங்களுடன் எனக்கு மெசேஜ் வந்தது. எப்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்த என் செல்போன் எண்ணை சட்டவிரோதமாக பெற்றீர்கள்? என்பதை கூற வேண்டும். மேலும் இதற்காக எவ்வளவு பணம் செலவு செய்தீர்கள்? என்பதையும் கூற வேண்டும்'' என தெரிவித்துள்ளார். இதுபற்றி சாங்கி சிட்டிசன்ஸ் குழுவின் உறுப்பினர் வினய் குமார் கூறுகையில், ‛இது தனியுரிமை கொள்கையை மீறும் வகையில் உள்ளது. இது பற்றி விசாரிக்க வேண்டும்'' என்றார். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாகி உள்ளது.












Click it and Unblock the Notifications