கர்நாடகாவிற்கு விசிட் அடிக்கும் திருமாவளவன்.. காங்.கட்சிக்காக பிரசாரம் செய்ய போவதாக அறிவிப்பு.. ஆஹா
பெங்களூர்: கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருப்பதால் தேர்தல் களம் உச்ச கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து பிரசாரம் செய்யப்போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடைபெறுகிறது.

அங்கு தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க பாஜக- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருப்பதால் தேர்தல் களம் உச்ச கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி இன்றும் நாளையும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். அதேபோல், பாஜக தலைவர்களும் கர்நாடகாவில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரு கட்சிகளுக்கும் ஆதரவாக கூட்டணி கட்சி தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய அக்கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறினார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தொல் திருமாவளவன் கூறியதாவது:-
"கர்நடாகாவில் நடைபெற சட்டமன்ற பொதுத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கர்நாடக பிரிவு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைப்பது என தீர்மானித்து இருக்கிறோம். விரைவில் நான் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் சிலரை ஆதரித்து பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன்" என்றார்.
தொடர்ந்து 12 மணி நேர வேலை மசோதா குறித்த தனது எதிர்ப்பை பதிவு செய்த திருமாவளவன் கூறியதாவது:- தொழிலாளர்களுக்கு விரோதமான ஒரு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. 8-மணி நேரம் என்ற தொழிலாளர்களின் உரிமை பறிக்கப்படுகிற வகையில் 12 மணி நேர வேலை என்கிற மசோதாவாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

தோழமைக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திராவிட முன்னேற்ற கழகத்தின் தொழிலாளர் நலன் கொள்கைகளுக்கே எதிராக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. முதல்வர் இதில் உடனடியாக நல்ல முடிவை எடுக்க வேண்டும். இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
திமுக மீதான நம்பகத்தன்மைக்கு எதிராக இது அமையும். நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும். ஆகவே முதல்வர் இந்த தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று விசிக சார்பாக வேண்டுகோள் விடுக்கிறோம். அனைத்து கூட்டணி கட்சிகளும் சேர்ந்து முதல்வரை சந்தித்து இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்த இருக்கிறோம்.
கிருஷ்ண்கிரி மாவட்டம் கொடூரமான வன்கொடுமைகள் அரங்கேறும் மாவட்டமாக உள்ளது. எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தை வன்கொடுமை பகுதி என்று அறிவிக்க வேண்டும் என்று விசிக வேண்டுகோள் வைக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications