பாஜகவுக்கு ‛செக்’.. லிங்காயத் ஓட்டுக்கு குறி.. மடாதிபதிகளை சந்தித்த ராகுல்!பசவ ஜெயந்தியில் பங்கேற்பு
பெங்களூர்: கர்நாடகாவில் பாஜகவின் ஓட்டு வங்கியாக லிங்காயத் சமுதாயம் உள்ளது. இந்நிலையில் தான் பாஜகவின் ஓட்டு வங்கிக்கு ‛செக்' வைக்கும் வகையில் ராகுல் காந்தி இன்று நடந்த பசவ ஜெயந்தி விழாவில் பங்கேற்றதோடு மடாதிபதிகளை சந்தித்தார். மேலும் பசவ ஜெயந்தி விழாவில் ராகுல் காந்தி உரையாற்றி கைத்தட்டுகளை குவித்ததை பாஜக உற்று கவனிக்க தொடங்கி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த முறை பாஜகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில் 223 இடங்களுக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது.

கர்நாடகாவை பொறுத்தமட்டில் லிங்காயத் ஓட்டுக்கள் தான் பாஜகவுக்கு பலமாக உள்ளன. இந்த ஓட்டுக்களை காங்கிரஸ் கட்சி வசப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு வலு சேர்க்கும் வகையில் தான் பாஜகவில் சீட் மறுக்கப்பட்ட நிலையில் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ெஷட்டர் மற்றும் மாஜி துணை முதல்வர் லட்சுமண் சவதி உள்ளிட்டவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். இது காங்கிரஸ் கட்சிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் லிங்காயத் சமுதாயத்தின் பசவ ஜெயந்தி விழாவில் ராகுல் காந்தி இன்று பங்கேற்றார். இதற்காக ராகுல் காந்தி இன்று காலை கர்நாடகம் வந்தார். தார்வார் மாவட்டம் உப்பள்ளி விமான நிலையத்தில் வந்திறங்கிய ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்றனர். அதன்பிறகு ஹெலிகாப்டரில் பாகல்கோட்டையில் உள்ள கூடலசங்கமா மைதானத்துக்கு சென்ற ராகல் காந்தி செல்லும் ராகுல் காந்தி கூடலசங்கமா கோவிலில் தரிசனம் செய்தார். அதன்பிறகு பசவண்ணாவின் ஒற்றுமை மண்டபத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்றார்.

இந்த விழாவில் ராகுல் காந்தி பேசியதாவது: ‛‛இன்று நாம் குரு பசவண்ணாவுக்கு மாரியாதை செலத்துகிறனே். அவர் வாழ்ந்தபோது அவர் தாக்கப்பட்டார். மேலும் அவர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார். இருப்பினும் அவர் தனது உண்மையின் பாதையில் இருந்து ஒருபோதும் விலகவே இல்லை. இதனால் தான் நாம் அவரை இன்றும் நினைவு கூர்ந்து மரியாதை செய்கிறோம். ஒருபோதும் கேள்விகளை எழுப்பாதவர்களுக்கும், சமூகத்தின் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்காதவர்களுக்கும் நாம் ஒருபோதும் மலர்தூவி மரியாதை செலுத்த மாட்டோம்'' என்றார்.

முன்னதாக விழாவில் பங்கேற்ற ராகுல் காந்தியை லிங்காயத் சமுதாயத்தின் மடாதிபதிகள் வரவேற்றனர். அவர்கள் ராகுல் காந்திக்கு சால்வை மற்றும் பசவண்ணரின் சிலைகளை நினைவு பரிசாக வழங்கினர். இதனால் ராகுல் காந்தியின் நடவடிக்கையை பாஜக உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளது. எக்காரணம் கொண்டும் லிங்காயத் சமுதாயத்தின் ஓட்டுகள் பாஜகவின் பக்கம் சென்றுவிடக்கூடாது என்பதில் பாஜக உறுதியாக உள்ள நிலையில் நாளை ராகுல் காந்தி மீண்டும் கர்நாடகாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதனால் அவரது செயல்பாட்டை பாஜக தீவிரமாக கண்காணிக்க தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications