கர்நாடகாவில் பிரதமர் மோடியை நோக்கி செல்போன் வீச்சு.. பரபரத்த மைசூர் பேரணி.. பின்னணி என்ன?
பெங்களூர்: பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி மைசூரில் பிரசார வாகனத்தில் நின்று தொண்டர்களை நோக்கி கையசைத்து பேரணி சென்றார். இந்த வேளையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி பிரதமர் நரேந்திர மோடியின் வாகனம் மீது செல்போன் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி நேற்றும், இன்றும் கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி மைசூரில் பிரசார வாகனத்தில் நின்று ஊர்வலம் சென்றார். அப்போது அவருடன் பாஜக வேட்பாளர்கள், எம்பி பிரதாப் சிம்ஹா, முன்னாள் அமைச்சர் கேஎஸ் ஈஸ்வரப்பா உள்ளிட்டவர்கள் நின்றனர். பிரதமர் நரேந்திர மோடியை பார்க்க பாஜகவினரும், பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களை பார்த்து கையசைத்தபடி பிரசார வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஏராளமானவர்கள் பிரதமர் மோடியின் பிரசாரத்தை செல்போனில் போட்டோவாகவும், வீடியோவாகவும் எடுத்தனர். மைசூர் கேஆர் சர்க்கிள் அருகே பிரதமர் மோடியின் பிரசார வாகனம் சென்றது.

அப்போது திடீரென்று கூட்டத்தில் இருந்து பிரதமர் மோடியை நோக்கி செல்போன் ஒன்று வீசப்பட்டது. இதனை பிரதமர் மோடி உள்பட யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால் மோடியின் அருகே நின்ற பாதுகாவலர் திடுக்கிட்டார். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக செல்போன் பிரதமர் மோடி மீது விழவில்லை. மாறாக பிரசார வாகனத்தின் மீது விழுந்தது.
இதையடுத்து உடனடியாக போலீசார் அலர்ட்டாகினர். பிரதமர் மோடியை நோக்கி செல்போன் எறிந்தது யார்? எதற்காக எறியப்பட்டது? பின்னணி என்ன? என்பது பற்றி தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவம் பிரதமர் நரேந்திர மோடியின் பேரணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் கூட பேரணி நிற்கவில்லை. தொடர்ச்சியாக பேரணி நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications