காங்கிரஸின் "ராஜதந்திரம்".. பாஜகவை அதிர வைத்த 2018 கர்நாடக தேர்தல் முடிவு நினைவிருக்கா? FLASH BACK
பெங்களூர்: கர்நாடக மாநிலத்துக்கான சட்டசபைத் தேர்தல் இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மாலை வெளியாக இருக்கின்றன. இந்த சூழலில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் என்னவென்று அலசுவோம்.
கர்நாடக மாநில பாஜக அரசின் பதவிக்காலம் இம்மாதம் 24 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளதை தொடர்ந்து இன்று அம்மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வருகின்றன. இதில் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இன்று மாலை வாக்குப்பதிவு நிறைவடைந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் முடிவுகள் வெளியாக இருக்கின்றன. மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதேபோல்தான் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று தேர்தல் முடிவுகள் மே 15 ஆம் தேதி வெளியாகின.
அதில் 72.13 சதவீத வாக்குகள் பதிவாகின. அந்த தேர்தலிலும் அப்போது ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட்டன. அந்த தேர்தலில் வெளியான முடிவுகள் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்ததுடன், மத்தியில் ஆளும் பாஜகவை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
அந்த தேர்தல் முடிவுகளால் ஏற்பட்ட குழப்பம் தேர்தல் முடிந்து 3 ஆண்டுகள் வரை தொடர்ந்துகொண்டு இருந்தது. ஆம், 224 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் அப்போது ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ், அதற்கு முந்தைய தேர்தலில் 122 தொகுதிகளில் வெற்றிபெற்று இருந்த நிலையில், 2018 ஆம் ஆண்டில் வெறும் 80 தொகுதிகளில் மட்டுமே வென்றது.
அதே நேரம் பாஜகவின் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 40 இல் இருந்து 104 ஆக அதிகரித்தது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் 3 தொகுதிகளை குறைவாக பெற்று 37 இடங்களில் வென்றது. பாஜக அதிக இடங்களில் வென்றாலும் வாக்கு சதவீதத்தில் 38.14% உடன் காங்கிரஸ் முதலிடத்தில் இருந்தது. பாஜக 36.35% வாக்குகளையும், மஜத 18.3% வாக்குகளையும் வென்றது.
ஆனால், எந்த கட்சியும் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் வெற்றிபெறவில்லை. ஆனால், அம்மாநில ஆளுநர், 104 தொகுதிகளில் வென்ற பாஜகவை ஆட்சியமைக்க அழைத்து பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் கொடுத்தார். இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில்தான் காங்கிரஸ் தனது ராஜதந்திரத்தை கையில் எடுத்து பாஜகவை அதிரவைத்தது. குறைவான தொகுதிகளை வென்ற மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமியை முதலமைச்சராக்குவதாக கூறி தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்தது. இதன் மூலம் பெரும்பான்மைக்கு தேவையான மேஜிக் நம்பரை அடைந்தது காங்கிரஸ் - மஜத கூட்டணி.
சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாத காரணத்தால் எடியூரப்பா பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். குமாரசாமி கர்நாடக முதலமைச்சராக காங்கிரஸ் ஆதரவுடன் பதவியேற்றார். ஆனால், குமாரசாமி ஆட்சி ஓராண்டை கடந்த நிலையில் காங்கிரஸ் - மஜக எம்.எல்.ஏக்கள் 16 பேர் ராஜினாமா செய்ததால் ஆட்சி கவிழ்ந்து மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தது.












Click it and Unblock the Notifications