கர்நாடக ஐடி நிறுவன ஊழியர்கள் மேலும் சில மாதங்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்கலாம்- துணை முதல்வர்
பெங்களூர்: பெங்களூர் உள்பட கர்நாடகாவில், தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் மற்றும் சாப்ட்வேர் நிறுவன ஊழியர்கள் மேலும் சில மாதங்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்த மாநில துணை முதல்வரும் ஐடி மற்றும் பிடி துறைகளுக்கான அமைச்சருமான அஸ்வத் நாராயணன் தெரிவித்தார்.
சட்டசபையில் இது தொடர்பாக சுயச்சை உறுப்பினர் சரத் என்பவர் கேள்வி எழுப்பியிருந்தார். தனது கேள்வியில் தகவல்தொழில்நுட்ப ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதன் காரணமாக உற்பத்தி திறன் குறைந்து உள்ளது..
இந்த துறையுடன் சார்ந்த வாகன போக்குவரத்து, கார் போக்குவரத்து, உணவக தொழில்கள் வீழ்ச்சி அடைந்து உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
இதோ பாவாடை தாவணியில் நிக்கிறது யார் தெரியுமா.. வாயை பிளக்க வைத்த பெங்களூர் மாப்பிள்ளை..!
வலியுறுத்தாது
இதற்கு பதில் அளித்த அஸ்வத் நாராயண், கடந்த மார்ச் மாதம் நடுப்பகுதியிலிருந்து ஐடி தொழிலாளர்களை வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன. எனவே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முழுமையாக திறந்து செயல்பட வேண்டும் என்று கர்நாடக அரசு வலியுறுத்தாது.
கொரோனா பரவல் குறைந்துள்ளது
கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் கூட முழுமையாக அந்த தொற்றுநோய் இன்னும் ஒழியவில்லை. எனவே அரசு அவசரப்பட்டு அனைத்து நிறுவனங்களையும் திறந்து வைக்குமாறு உத்தரவிட முடியாது.
ஐடி துறை வளர்ச்சி
9 மாதங்களாக வீட்டில் இருந்து வேலை பார்த்தாலும், ஐடி துறை வளர்ச்சி அடைந்துதான் காணப்படுகிறது. சில நேரங்களில் இதுபோன்ற காலகட்டங்களில் தகவல் தொழில்நுட்பத் துறை வெகுஜன மக்களுக்கு உதவியாக இருந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும், சில மாதங்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்ற கர்நாடக அரசு அனுமதி கொடுக்கும் என்பது உறுதியாகி உள்ளது.
பெங்களூர்
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இங்கு தமிழகத்தை சேர்ந்த பலரும் வேலை பார்த்து வருகிறார்கள். வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதி கிடைத்துள்ளதால் அவர்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்தபடி வேலை பார்க்கிறார்கள். இதனால் வழக்கத்தை விட பெங்களூர் நகரில் வாகன போக்குவரத்து குறைவாக இருக்கிறது. ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள இடங்களில் உள்ள உணவகங்களில் கூட்டம் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.